மகாராஷ்டிராவில் தேவேந்திரபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றது நாடகம் என்று பாஜக தலைவர் அனந்த குமார் ஹெக்டே உளறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக சிவசேனா கட்சி கூட்டணியிலிருந்து முதல்வர் பங்கீடு சர்ச்சையால் சிவசேனா கட்சி வெளியேறியது. அதன் பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில் திடீரென பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவாடன் இணைந்தது முதல்வர் பதவி ஏற்றார். அவரால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் வாக்கெடுப்பு நடத்தாமலே பதவி விலகினார்.
இது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான அனந்த குமார் ஹெக்டே, “நமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் வெறும் 80 மணி நேரம் மகாராஷ்டிர முதல்வர் பதவி வகித்ததை நாம் அறிவோம். அதன் பிறகு அவர் ராஜினாமா செய்தார்? அவர் ஏன் இவ்வாறு நாடகம் நடத்தினார் தெரியுமா? நமக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை அவர் அறிந்தும் முதல்வரானது ஏன் எனப் பலரும் கேள்விகள் கேட்கின்றனர்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அரசிடம் இருந்து ரூ.40,000 கோடி நிதியை வாங்கி வைத்திருந்தார். அவருக்கு சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தால் இதை தாறுமாறாகச் செலவழித்து விடுவார்கள் என்பது நன்கு தெரியும். அதனால் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு 15 மணி நேரத்தில் அந்த ரூ.40000 கோடியை மத்திய அரசுக்குதிருப்பி செலுத்தி விட்டார்” இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று உளறி உள்ளார்.