மகாராஷ்டிராவில் அடுக்கு மாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் மீது சுமார் 60 அடி நீள சுவர் விழுந்ததால் குடிசைகள் சேதமடைந்தன. சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த கார்களும் பள்ளத்தில் விழுந்தன. இதனால், குடிசைகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குடிசைகளில் வசித்த மக்கள் 15 பேர் இறந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.