tamilnadu

img

ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் பாஜக மிரட்டலுக்கு பணிந்த அஜித் பவார்

மும்பை,நவ.24 -  சிவசேனா,காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க இருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சட்டமன்றக்கட்சித் தலைவரு மான அஜித் பவார் யாரும் எதிர்பாராத நிலையில் சில எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். அஜித் பவாரின் இச்செயல் துரோகத்தனமானது என்று அக்கட்சியினர் கொந்தளிப்புடன் சாடியுள்ளனர்.   தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார் கூட்டுறவு வங்கி முறைகேட்டில் சிக்கியுள்ளதால்  பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள்  கூறு கின்றனர். அஜித்பவார் மீது கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இது ரூ.25,000 கோடி சம்பந்தப்பட்ட ஊழல். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர் மீது மும்பை காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. அஜித்பவார் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பெயரையும் சேர்த்தது. இதையடுத்து மும்பையில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு சரத்பவார் நேரில் ஆஜரானார். அப்போது அனைத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் மும்பையில் இருந்தனர். ஆனால், அஜித் பவார் மட்டும் மும்பைக்கு வரவில்லை. மேலும் அஜித்பவார், சரத் பவாரிடம் சொல்லாமலே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கும் நீண்ட இழுபறிக்கு பிறகுதான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. இதனால்  அஜித் பவார், சரத்பவார் மீது அதிருப்தியானதாக கூறப்படுகிறது. சமீபத்தில்  மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டில் இருந்து வெளியேறிய அஜித்பவார், சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை ரத்தானதாக கூறிவிட்டு பாரமதிக்கு புறப்பட்டு சென்றார்.  ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த வழிமுறையையும் கடைப்பிடிக்கும் ‘வித்தியாசமான கட்சி’ என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் பாஜக, மகாராஷ்டிராவில்,ஊழல் வழக்கில் சிக்கிய அஜித்பவாரை பாஜக உயர்மட்ட தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக வளைத்துப் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. பாஜக மிரட்டல் மற்றும் ஊழல் வழக்கில் இருந்து விடுபடத்தான் கடைசி நேரத்தில், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க அஜித்பவார் முன்வந்ததாக கூறப்படுகிறது.அஜித் பவாரை மிரட்டி பாஜக அவரது ஆதரவை பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமும் குற்றம்சாட்டியுள்ளார்.