tamilnadu

img

வெளிநாடு பயணம்: புதுச்சேரி ஆளுநருக்கு முதல்வர் பதிலடி

புதுச்சேரி, நவ.12- முறைப்படி அனுமதி பெற்று தான் வெளிநாடு பயணம் மேற்கொண்டோம் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு  முதல்வர் நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.  புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள், மலேசியாவின் தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் முதலமைச்சர், அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ ஆகியோரை தனித்தனியாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்வதாக அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று மூன்று பேரும் அரசுமுறைப் பயணமாக இல்லாமல், தனிப்பட்ட பயணமாக கடந்த 6 ஆம் தேதி சிங்கப்பூர் சென்றோம். 7 ஆம் தேதி காலை சிங்கப்பூரிலுள்ள விமானம் மற்றும் கட்டுமானப் பணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியை சந்தித்து பேசினோம். 

அப்போது, புதுச்சேரியில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும்படி கோரிக்கை விடுத்தோம். அந்த நிறுவனம் இந்தியாவில் பல சர்வதேச விமான நிலையங்களை கட்டிய அனுபவம் கொண்டது. ஐதராபாத், தில்லியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க இணைந்து பணிபுரிந்துள்ளது.  ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு முதல்வராக இருந்தபோது அந்த நிறுவனத்துடன் விஜயவாடா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற போடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. முதல் கட்டமாக புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பேசினோம்.  அப்போது அமைச்சர் ஷாஜகான் மற்றும் சிவா எம்.எல்.ஏ., தனியாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கலாம் என்று ஆலோசனை கூறினர். அதன்படி கரசூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் சர்வதேச விமான நிலையம் கொண்டு வரலாம் என்பதை கருத்தில் கொண்டு பேசியுள்ளோம். அந்த விமான நிலையம் தனியார் பங்களிப்புடன் கொண்டுவரப்படும். புதுச்சேரியில் சர்வதேச விமான நிலையம் வருவதன் மூலம் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும். 

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வியாபார கூட்டமைப்புடனும் பேசினோம். அதில் 25க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வர ஆர்வமாக இருப்பதாக உறுதியளித்தனர். மேலும் இது தொடர்பாக புதுச்சேரிக்கு வந்து அரசுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். பிறகு, ஆசிய முதலீட்டாளர்களை சந்தித்தோம். அப்போது ஒரு நிறுவனம் காரைக்காலில் ரூ.1500 கோடி முதலீட்டில் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டுவருவதாக உறுதியளித்துள் ளது.  அதுபோல் தமிழகத்தில் திருவாரூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் காரைக்காலில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர். மேலும் புதுச்சேரியில் ஒரு மிகப்பெரிய மாலும் கொண்டுவர ஆர்வமாக உள்ளனர்.

இந்த சந்திப்புகளின்  மூலம் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் புதுச்சேரியில் தரமான விமான நிலையம், சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, தொழிற்பூங்கா ஆகிய நான்கு திட்டங்களை கொண்டுவர உள்ளனர். இது சம்பந்தமாக மேலும் அவர்களுடன் பேச உள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் சிங்கப்பூர் சென்று சந்தித்து பேசவும் உள்ளோம். எவ்வளவு மூலதனம் கொண்டுவர முடியுமோ, அவ்வளவு மூலதனம் கொண்டு வருவோம். புதுச்சேரி, காரைக்காலில் உள்ள நிலங்களை முறையாக பயன்படுத்த முயற்சி எடுத்து வருகின்றோம்.  பிறகு, 9 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள உலக அளவில் 10 ஆம் இடத்தை பிடித்துள்ள பல்கலைக்கழக இயக்குநரை சந்தித்து பேசினோம். அங்கு ஆந்திராவைச் சேர்ந்தவர்தான் வேந்தராக உள்ளார். புதுச்சேரி மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு தருவதாக ஒப்புக்கொண்டார். அதுபோல் சிங்கப்பூர் மாணவர்களை புதுச்சேரியில் படிக்க அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.  அதனைத் தொடர்ந்து அங்குள்ள பாலிடெக்னிக் ஒன்றிற்கும் சென்றோம். அது பொறியியல் கல்லூரியைப்போல் இருந்தது. அவர்களும் மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்வதாக உறுதியளித்தனர். 

புதுச்சேரியில் அதிகளவு முதலீடு கொண்டுவர வேண்டும், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த தனிப்பட்ட பயணத்தின் முக்கிய காரணம். காரைக்காலில் அமைய உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் 850 முதல் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  எனவே, விதி முறைகளை கடைபிடித்து தான் வெளிநாடு பயணம் சென்றோம். மேலும், இந்த பயணம் குறித்து பிரதமருக்கு நாங்கள் மூன்று பேரும் தனிப்பட்ட முறையில் தெரிவித்து முறைப்படி கடிதம் எழுதினோம். வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். அமைச்சகமும் அரசியல் தடை நீக்கல் சான்றிதழும் கொடுத்துள்ளது. சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு பயணத்திட்டத்தை அனுப்பி வைத்திருக்கிறோம்.  ஆனால், எந்த விவரமும் தெரியாமல் துணை நிலை ஆளுநர் வெளிநாடு செல்ல யார் அனுமதி கொடுத்தது? யார் செலவு செய்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் அனுமதி கொடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் அடிமையில்லை.  இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.