tamilnadu

img

கண்ணன் கோபிநாதனை அடுத்து மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா

மங்களூரு, செப். 6- அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப் பட்டதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தாங்கிக் கொள்ளாமல், கண்ணன் கோபிநாதன்  தன் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் என்பவரும் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நம் நாட்டின் பன்முக ஜனநாயகத் தன்மை சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு அடிப்படைக் கட்டமைப்பே தகர்க்கப்படும்போது ஐஏஎஸ் அதிகாரியாகத் தொடர்ந்து பணியாற்றுவது ‘நெறிமுறையற்ற’ (‘unethical’) செயலாகும்  என்று சசிகாந்த் செந்தில் கூறுகிறார். எஸ். சசிகாந்த் செந்தில், 2009ஆம் ஆண்டு அணியில் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்தவர். தற்போது தட்சிண  கன்னட மாவட்டத்தில் துணை ஆணையராக இருந்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமையன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். வரவிருக்கும் நாட்கள், நாட்டின் அடிப்படை வலைப் பின்னலுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.  எனவே, ஓர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து பணியாற்றுவதை விட வெளியிலிருந்து என் பணியைத் தொடர்வதே சிறந்தது என்று சசிகாந்து செந்தில் கூறியுள்ளார்.  40 வயதாகும் சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். திருச்சியில் உள்ள பாரதி தாசன் பல்கலைக் கழகத்தின் ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ.(எலக்ட்ரானிக்ஸ்) தேர்ச்சி பெற்றவர்.  (ந.நி.)