சோஷலிசம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈர்ப்பு மையமாகவே திகழ்ந்தது. காங்கிரஸ் மீதான அதிருப்தியும் கோபமும் ஒருபுறம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் துரத்தின. மறுபுறம் லெனினும் ரஷ்யப் புரட்சியும் சோஷலிசமும் இழுத்தன. 1932 ல் காங்கிரஸ் அறிவித்த சட்ட மறுப்பு இயக்கம் அரசைச் சீண்டுவதாக இருந்தது. அதையடுத்து காந்தி, ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாசிக் சிறைவாசம் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. சிறையில் இருந்த ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மினு மசானி, அச்யுத் பட்வர்த்தன், யூசுப் தேசாய் போன்ற சக சிறைவாசிகளுடன் உரையாடல்களில் ஈடுபட்டார்; சோஷலிசம் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு எனும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. இந்திய அரசியலில் ஒரு புதியபாதையை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது. சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை ஆனவுடன், பாட்னா மாநாட்டில் கூடிய சோஷலிஸ்ட் ஆர்வலர்கள் ஓர் தனி அமைப்பு காண விரும்பி, நகல்திட்டம் தயாரிக்க ஜெயப்பிரகாஷ் தலைமையில் ஓர் குழு அமைத்தனர்.
மகாத்மாகாந்தியும் காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் தனியே செயல்படுவதை ஆதரித்தார். தமக்கும் கம்யூனிஸ்ட் கொள்கை பலது பிடிக்கும் என்றும் அவர்கள் வழிமுறையோடுதான் தாம் மாறுபடுவதாகச் சொன்னார். 1934 ல் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை’ உருவாக்கினர். ஆச்சாரியா நரேந்திரநாத் தலைவராகவும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராம் மனோகர் லோகியா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், கேளப்பன், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. ஐயங்கார் உள்ளிட்டோர் அதில் இணைந்து செயல்பட்டனர்.
பெரியார் ஈரோட்டு திட்டத்தை கைவிட்டு சமூகப் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் போராடப் போவதாக அறிவித்த போது மனமுடைந்தோரை ஒருங்கிணைத்து ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யை உருவாக்கிட ப.ஜீவானந்தம் முயன்றார். திருச்சியில் கூட்டப்பட்ட மாநாட்டைத் துவக்கி வைத்த எஸ்.ஏ.டாங்கே தனிக்கட்சி தேவை இல்லை. காங்கிரஸ் சோஷலிச கட்சியில் அங்கமாகலாம் என ஆலோசனை சொன்னார். எஸ்.ஏ.டாங்கேயின் வேண்டுகோளை ஏற்று அமைப்பு மாநாட்டிலேயே சுயமரியாதை சமதர்மக் கட்சி கலைக்கப்பட்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைய முடிவெடுக்கப்பட்டது. 1936 நவம்பரில் சேலத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் ஜீவா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, நீலாம்பிகை என பலரும் அதில் முக்கிய பங்காற்றினர். இம்மாநாட்டில் ஜீவா முன் வைத்த அறிக்கையில், “தமிழ்நாட்டின் சோஷலிஸ்ட் இயக்க வளர்ச்சி; சோஷலிசத்திற்காகவும் -சுதந்திரத்திற்காகவும் - அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை அடக்குமுறையிலிருந்தும், கஷ்ட நிஷ்டூரங்களில் இருந்து விடுதலை செய்வதற்காகவும் – நடைபெறும் பொதுவான இயக்கத்தின் ஒரு பகுதியே. தேசிய இயக்கத்தின் விசேஷித்த உருவமாக அது இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.
இந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் கேரளக் கிளையில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், கேளப்பன் உள்ளிட்டோர் இருந்தனர். அவர்கள் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி இயங்கியது; காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிஸ்ட்டுகள் இயங்கினர். இது குறித்து இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதுகிறார், “காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முதல் [1934 பம்பாய்] மாநாட்டின் அடிப்படை ஆவணங்கள் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருப்பதை கட்டாயமாக்கியது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பலர் காங்கிரஸில் வேலை செய்தாலும் உறுப்பினராவது கட்டாயமில்லை. எனினும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும் காங்கிரஸ் சோஷலிஸ்ட்டுகளுக்கும் முன்பு இருந்த வேறுபாடு மறைந்து போனது. கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் சோஷலிஸ்ட்களும் தங்கள் தங்கள் கட்சிப் பணிகளை சுதந்திரமாகச் செய்து கொண்டே காங்கிரஸிலும் பணி புரிந்தனர்.”
எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் இரு சாராருக்கும் கருத்து வேறுபாடு நீடித்தது. கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியை வலுப்படுத்தவே முன்னுரிமை தந்தனர். சோஷலிஸ்ட்டுகள் காங்கிரசுக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவதில் முன்னுரிமை தந்தனர். 1936 ல் மீரட்டில் கூடிய இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாடு வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்கியது. மீரட் கோட்பாடு என இது அழைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் செயலாளர் பி.சி.ஜோஷிக்கும் சோஷலிஸ்ட் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒற்றுமை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளிலும் சோஷலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்து செயல்பட வழிவகுத்தது.
காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரிவினரும், இடதுசாரிகளும் இணைந்து செயல்பட ஆரம்பித்தனர். ஆனால் மசானி, மேத்தா தலைமையிலான குழு இதனை விரும்பவில்லை. ஆரம்பம் முதலே தொல்லை கொடுத்தனர். ‘அந்நிய கம்யூனிஸ்டுகள்’ என அவதூறு செய்தனர். கம்யூனிஸ்ட் அகிலத்தோடு தொடர்பு கூடாது என்றனர். இறுதியில் 1940 ல் இணைச் செயலாளராக இருந்த இ.எம்.எஸ் உட்பட கம்யூனிஸ்ட்டுகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விடுதலைக்குப் பின் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியானது காங்கிரஸ் என்ற முன்னொட்டை நீக்கிவிட்டு சோஷலிஸ்ட் கட்சி ஆனது. 1952 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. படு தோல்வி அடைந்தது அதேசமயம் கம்யூனிஸ்ட்டுகள் ஓரளவு வெற்றி பெற்றனர். நெடிய வரலாற்றை அறிவதும் படிப்பினை பெறுவதும் அவசியம்.