புதுதில்லி, ஆக.25- அமேசான் காடுகளில் பற்றிப்படர்ந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தாத பிரேசில் நாட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டித்துள்ளது. புதுதில்லியில் உள்ள பிரேசில் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.ஏ.முகம்மது ரியாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அவோய் முகர்ஜி, கேரள மாநில செயலாளர் ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அமேசான் காட்டுத்தீ குறித்து பி.ஏ.முகம்மது ரியாஸ் கூறியதாவது: அமேசானின் கனிம வளத்தை கைப்பற்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்கள் இந்த காட்டுத்தீயின் பின்னணியில் உள்ளதாக லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகின்றன. இந்த காடுகள் பூமியில் மனிதர்கள் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20 சதவிகிதத்தை வெளியிடுகின்றன. அமேசான் காடுகள் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டுள்ளன.
இந்த ஆண்டு மட்டும் 74 ஆயிரத்துக்கும் அதிகமான தீ பரவும் சம்பவங்கள் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83 சதவிகிதம் அதிகமாகும். புதிய பிரேசில் அதிபர் பிளேமேட் ஜே போல்சனாரோ கார்ப்பரேட்டுகளின் விளையாட்டுகளுக்கு உதவுகிறார். இந்த இயற்கை பேரழிவை கட்டுப்படுத்த முன்வரவில்லை. அவர் மேற்கொள்ளும் எதிர்மறை நிலைப்பாடு சந்தேகங்களை பலப்படுத்துகிறது. பொலிவிய எல்லைக்குள் காடு முழுவதும் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதில் அந்நாட்டின் இடதுசாரி ஆட்சியாளரான ஈவா மோரலஸ் முக்கிய பங்கு வகித்தார். உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்த பணிக்கு அமர்த்தியிருப்பது மிகவும் ஆறுதலளிக்கிறது. ஆனால் அமேசான் காடுகளில் பெரும்பகுதி பிரேசிலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. உலக சூழலில் போல்சனாரோவின் அலட்சியம் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது என பி.ஏ.முகம்மது ரியாஸ் சுட்டிக்காட்டினார்.