காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்
...நேற்றைய தொடர்ச்சி
வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான மோதல்
எனினும், ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி வளர்ந்து வந்த நிலையில் இடதுசாரிகள் தங்களை மேலும் மேலும் அணிதிரட்டிக்கொள்ளவும், வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டதால், வலதுசாரிகள் பதற்றமடைந்தனர். அவர்கள், மூன்றாண்டு காலம் நேரு மற்றும் போஸ் ஆகிய இடதுசாரி காங்கிரஸ் தலைவர்களை சகித்துக் கொண்டனர்; அது அவர்களுக்கு 1937ஆம் ஆண்டு தேர்தல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் அளவிற்கான ஒரு ஸ்தாபனமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு உதவி செய்தது. எனினும், காங்கிரசின் காரியக்கமிட்டியில் இடதுசாரிகள் சிறுபான்மை எண்ணிக்கையாகவே இருந்தார்கள். நேருவும், போஸும் காங்கிரஸ் தலைவர் பதவியில், அவர்கள் பிரதானமாக வலதுசாரிகளே நிறைந்திருந்த காரியக்கமிட்டியுடன் இணைந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற அளவிற்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அந்த குறிப்பிட்ட மூன்றாண்டு காலத்தில் இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி என்பது உண்மையிலேயே காங்கிரசின் வலதுசாரி தலைமையை மிகுந்த படபடப்புக்குள்ளாக்கிவிட்டது. தேர்தல் போராட்டத்தில் காங்கிரசின் பின்னால் வெகுமக்களை அணிதிரட்டுவதில் இடதுசாரி இயக்கம் உதவி செய்தது என்ற போதிலும், அந்தத் தேர்தலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துகொள்ள முடியாத அளவிற்கு காங்கிரஸ் தலைமைக்குழு எதிராகவும் இடதுசாரி இயக்கம் நின்றது. எனவே, வலதுசாரி தலைமையில் இருந்தவர்கள், காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஓராண்டுகாலம் வகிப்பதற்கு சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் நான்காவது ஆண்டாக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையே காங்கிரசுக்குள் மிகக் கடுமையான போராட்டம் நடைபெற்றது. இடதுசாரிகளின் வேட்பாளராக சுபாஷ் சந்திர போஸும், வலதுசாரிகளின் வேட்பாளராக பட்டாபி சீத்தாராமையாவும் போட்டியிட்டார்கள். மிக முக்கியமான போராட்டமாக இது மாறிவிட்டது. இப்போராட்டத்தில் இடதுசாரிகள் சார்பில் வெற்றிகரமாக சுபாஷ் போஸ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதற்குப்பிறகுதான் இன்னும் கடுமையான மோதல் துவங்கியது. அந்த மோதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரை தோல்வியடைந்தவராக ஆக்குவதில் வலதுசாரிகள் சில தவறான உத்திகளை கைக்கொண்டு வெற்றிபெற்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்கு முன்பு வலுவாக கட்டமைக்கப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் விரிசல் விழத் துவங்கியது. 1936ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகள் ஆகிய அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்படக்கூடிய ஐக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை துவக்கிவைத்தது என்று சொன்னால், 1939ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாடு அதற்கு முடிவுரை எழுதும் விதமாக அமைந்துவிட்டது.
இது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவிலும் பிரதிபலித்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் அதன் ஸ்தாபன கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த மாசானி போன்ற தலைவர்கள் தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை ஆனது, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் தனிப்பட்ட தலைவர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளின் ஒற்றுமை அவசியம் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஏனென்றால், ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான், ஏன் சோசலிசம் என்ற நூலின் ஆசிரியர்; காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களை வடிவமைத்ததில் முதன்மையானவர். இந்த நிலையில், உலகில் குறிப்பிடத்தக்க அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுப்போக்குகள் நடந்துகொண்டிருந்தன. பாசிச எதிர்ப்பு இயக்கம் தீவிரமாக முன்னேறிக்கொண்டிருந்தது. அதேவேளை, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளின் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ தலைவர்களால் பாசிச எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் சதிவலைகளும் பின்னப்பட்டன. இத்தகைய உலகச் சூழலில் உலக அளவிலேயே கம்யூனிஸ்ட்டுகளின் சோசலிஸ்ட் ஒற்றுமை தேவை என்பதை ஜெயப்பிரகாஷ் நாராயணன் உணர்ந்திருந்தார். இந்தியாவிலும் கூட ஒன்றுபட்ட இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார். சாத்தியமானால் கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளை இணைத்துவிட வேண்டுமென்றும் கூறி வந்தார். மாசானி போன்ற தனது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சகாக்களின் கருத்தான, இரண்டு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது கம்யூனிஸ்ட்டுகளை வலுப்படுத்தவே உதவும் என்பது உண்மைதான் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒப்புக்கொண்டார். எனினும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை; அவரைப்பொறுத்தவரை, சோசலிஸ்ட் கட்சியும் சேர்ந்தே வளரும் எனக் கருதினார்.
எனினும், 1930களின் பிற்பகுதியில் நிலைமை வேகமாக மாறியது. சோவியத் ஒன்றியத்தில் எதிர்ப்புரட்சிக்காரர்களாக மாறிவிட்ட டிராட்ஸ்கியவாதிகளுக்கு எதிராக விசாரணைகள் நடக்கத் துவங்கின; எதிர்ப்புரட்சி பாதைக்கு சென்றுவிட்ட செஞ்சேனையின் சில உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பான செய்திகள், தாராளவாத சோசலிஸ்ட்டுகளான ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களை தடுமாற்றம் அடையச் செய்தது. இந்தத் தலைவர்கள், ஏற்கெனவே மாசானி மற்றும் அவரது கூட்டாளிகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகவும் கூறிவந்த சந்தேகக் கருத்துக்களை நம்பத் துவங்கினர். இந்தக் கருத்துக்கள் அடிப்படை அற்றவை என்று இதற்கு முன்பு அவர்கள் கூறிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. அங்கே சோவியத் ஒன்றியத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டநிகழ்வுப் போக்குகளின் பின்னணியில், சோவியத் தலைவர்கள் நாஜிச ஜெர்மனியுடன் அனாக்கிரமிப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து, இங்கே கம்யூனிஸ்ட்டுகள் மீதான இவர்களது சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உலக நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இருந்த மாசானி, அசோக் மேத்தா, பட்வர்தன் போன்ற தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனை நெருக்கமானவராக மாற்றியது. எனினும், ஏற்கெனவே வரையறுக்கப்பட்டு பிரகடனம் செய்யப்பட்ட மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களின் அடிப்படையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து மிகப்பெரும் எண்ணிக்கையிலான இளம் காங்கிரஸ் ஆண்களும், பெண்களும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்; எனவே தனது முந்தைய நிலைப்பாடான சோவியத் ஆதரவுமற்றும் பாசிச எதிர்ப்பு என்பதிலிருந்து புதிய நிலைப்பாடான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி ஜெயப்பிரகாஷ் நாராயணனால் நகர்ந்து செல்ல முடியவில்லை. முன்பு நிலவிய உலகச்சூழலில் உலகிலேயே பாசிச எதிர்ப்பு சக்திகளால் மிகவும் ஆதரிக்கப்பட வேண்டிய தளமாக சோவியத் யூனியனே திகழ்கிறது என்றும், எதிரி வர்க்க ஏஜெண்டுகளிடமிருந்து சோவியத் ஒன்றியம் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டி உள்ளது என்றும் உறுதியாக இவர்கள் நம்பினார்கள்; அதனால் சோவியத் ஒன்றியத்தின் தலைமைக்கும் கம்யூனிச அகிலத்தின் தலைமைக்கும் அவர்கள் முழு மனதுடனான ஆதரவினை அளித்திருந்தார்கள்.
சோவியத் - ஜெர்மனி உடன்பாட்டைப் பொறுத்தவரை, அதை சந்தேகமில்லாமல் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் ஏகாதிபத்தியம் ஒவ்வொரு ராஜ்ஜிய ரீதியான மற்றும் அரசியல் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தியது; அப்படி தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து தங்களது நாட்டை பாதுகாப்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு வழியையும், வாய்ப்பையும் சோவியத் தலைவர்கள் பயன்படுத்துவதில் மிக உறுதியாக இருந்தார்கள். அடுத்தடுத்த நிகழ்வுப்போக்குகள் அதை நிரூபித்தன. அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்திவிட்டு கடைசியாக நாஜிகள் சோவியத் மீது தாக்குதலைத் துவக்கினார்கள். அதை எதிர்த்து சோவியத் மக்கள் வரலாற்றில் முத்திரைப் பதிக்கத்தக்க விதத்தில் மிகப்பெரும் எழுச்சியோடு தடுத்து நிறுத்தி பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக பாசிசத்தை சோவியத் ஒன்றியம் மண்ணோடு மண்ணாக வீழ்த்தியது. இது, சோவியத் ஒன்றியத்தின் தலைமை மேற்கொண்ட நிலைபாடுகள் மிகச்சரியானவை என்பதை வரலாற்றில் நிரூபித்து விட்டன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- தொடரும்...