tamilnadu

img

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்தாக உள்ள ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயு சார்பில் கோவையில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியில் அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 100 நாள் திட்டத்தில் 40 ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கவும், ரயில்களை தனியார்கள் இயக்கவும், பராமரிக்கவும், பயணச்சீட்டு உள்ளிட்டு தனியார் விற்பனை செய்ய அனுமதிப்பது, சரக்கு ரயில் தனியாருக்கு திறந்து விடுவது போன்ற அபாயகரமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  இது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வேதுறை தனியார் மயமாக்கப்படுவதால்  தனியார் லாப வெறிக்கு வசதியாக ரயில் கட்டணங்கள் உயர வழிவகுக்கும்.   இது ரயில்வே துறையில் உள்ள ஒட்டு மொத்த ஊழியர்களில் நலன் பாதிக்கப்படுவதோடு பொது மக்களின் ரயில் சேவை கடுமையாக  பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து சிஐடியு - டிஆர்இயூ சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று கோவை ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  டி ஆர் யு கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணைத் தலைவர் சாம்பசிவம் மற்றும் தங்கவேல், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் துளசிதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.