நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14 தொடங்கி, அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தொடர் மொத்தம் 18 நாட்கள் நடைபெறுகின்றன.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இத்தேதிகளை இறுதிப்படுத்தின.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிநபர் இடைவெளியை உத்தரவாதம் செய்யும்பொருட்டு, மாநிலங்களவை முற்பகலில் என்றால், மக்களவை பிற்பகலிலும் அல்லது மாநிலங்களவை பிற்பகலில் என்றால் மக்களவை முற்பகலிலும் நடைபெறும் வண்ணம் நிகழ்ச்சிநிரல் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள இரு அவைகளின் இருக்கைகளிலும் இரு அவைகளின் உறுப்பினர்களும் அமரும் வண்ணம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அவைத்தலைவர் இருக்கையை நோக்கி முழக்கமிட்டுச் செல்லும் எதிர்க்கட்சியினர் போராட்டம் எப்படி இக்கூட்டத்தொடரில் நடக்கப்போகிறது என்று தெரியவில்லை.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆறு மாதங்களுக்குள் கூட்டப்பட்டாக வேண்டும். மார்ச் 23 பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 23க்குள் கூட்டப்பட வேண்டும். அதன்காரணமாகவே அதற்கு முன்னதாக செப்டம்பர் 14 அன்று கூட்டப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திடவில்லை. பிஎம்கேர்ஸ் என்னும் தனியார் அறக்கட்டளை சார்பில் வசூலிக்கப்பட்ட தொகையையும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திடவில்லை. மேலும் பொதுத்துறை நிறுவனங்களைத் தன் கூட்டுக்களவாணி முதலாளிகளுக்குத் தாரை வார்த்திடும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்திருக்கிறது. இவற்றையெல்லாம் மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
(ந.நி.)