கர்நாடகாவில் உயர் ஜாதியினரின் மோட்டார் சைக்கிளை தொட்டதற்காக தலித் இளைஞர் நிர்வாணமாக்கி தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டம் தலித்கொட்டிக்கு அருகில் உள்ள மினாஜ்கி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாத். இவர் உயர் ஜாதியினரின் மோட்டார் சைக்கிளை தொட்டதாக கூறி கடந்த 18ம் தேதி 13 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி உள்ளது. இதையடுத்து தெரியாமல் தொட்டு விட்டதாக காசிநாத் மன்னிப்பு கேட்ட பின்பும் அவரை கம்புகளாலும் செருப்பாலும் கடுமையாக தாக்கி உள்ளனர். அடி தாங்க முடியாமல் கீழே விழுந்த போதும் அவரது பேண்டை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி தாக்கினர். இந்த தாக்குதலை தடுக்க வந்த காசிநாத்தின் சகோதரி மற்றும் பெற்றோரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கி உள்ளது.
இச்சம்பவம் குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.