தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
புதுதில்லி, மே 12- கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்தி, மத்திய அரசும், தில்லி மாநில அரசும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அகவிலைப்படியை முடக்கியது செல்லாது என்றும், அவ்வாறு முடக்குவதற்கு அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்தில் (PMNRF-Prime Minister’s National Relief Fund) சுமார் 3,800 கோடி ரூபாய் தொகுப்பு இருப்பதாகவும், அதேபோன்று வெளிவந்துள்ள செய்திகளின்படி தற்போது பிரதமரின் பிஎம்கேர்ஸ் நிதியத்தில் 6,500 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றிருக்கிறார் என்றும் எனவே, அகவிலைப்படியை முடக்கக்கூடிய அளவிற்கு ‘நிதி அவசரநிலை இல்லை’ என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டில் பணவீக்கம், குறிப்பாக தில்லியில் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு ஊதியம் முடக்கப்பட்டிருக்கிறது என்றும், தில்லியில் எரிபொருள், மது, மற்றும் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன என்றும் கூறியிருப்பதுடன், அகவிலைப்படியை முடக்கி இருப்பது இந்திய அர சமைப்புச் சட்டம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் ஷரத்துக்களை மீறிய செயல் என்றும், இவ்வாறு அகவிலைப்படியை முடக்க அரசாங்கத்திற்கு இச்சட்டங்களின் ஷரத்துக்கள் அதிகாரம் வழங்கிடவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. (ந.நி.)