tamilnadu

img

சமஸ்தானங்களில் கம்யூனிஸ்ட் போர் முழக்கம் - சு.பொ.அகத்தியலிங்கம்

100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சில சாட்சிகள் - 12

‘அகண்ட இந்தியா’ என்று சங்பரிவார் வரைந்து காட்டுகிற இந்திய தேசப்படம் எப்போதும் அப்படி இருந்ததில்லை. குப்த சாம்ராஜ்யம், மௌரிய சாம்ராஜ்யம், மொகலாய சாம்ராஜ்யம் என எந்த சாம்ராஜ்யமும் அவ்வாறு இருந்ததில்லை. பிரிட்டிஷ் ஆண்ட போதும் அவ்வாறு இருந்ததில்லை. பள்ளி பாட புத்தகத்தில் பார்த்திருப்பீர்கள். ஒரு புறம் பிரிட்டிஷ் இந்தியா; அதன்நேரடி ஆட்சிக்குள் அடங்காத 563 சமஸ்தானங்கள் தனி. இதுவே அன்றைய தேசப்படம். தேசபக்தியை வெளிப்படுத்திய மன்னர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டனர். பிரிட்டிஷாரை தொழுதடிமையானோர் சமஸ்தானங்களாக தனித்து இயங்கினர். 119 பெரிய சமஸ்தானங்களும் 444 சிறிய சமஸ்தானங்களுமாக மொத்தம் 563 சமஸ்தானங்கள் இருந்தன. இந்திய நிலப்பரப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி சமஸ்தான ஆளுகையில் இருந்தது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு அதாவது எட்டு கோடிப்பேர் இவ்வாறு சமஸ்தான ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தனர். அவற்றில் காஷ்மீர், ஐதராபாத், மைசூர், திருவிதாங்கூர், பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா, ஜுனாகத், ஜோத்பூர், ஜெய்சல்மர் ஆகியவை முக்கியமானவை. தமிழ்நாட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் போன்றவை சிறிய சமஸ்தானங்கள்.

பெரிய சமஸ்தானங்கள் ஒருபுறம் பிரிட்டிஷாரைக் குஷிப்படுத்த அவர்கள் கேட்டதை தயங்காமல் செய்தனர். மறுபுறம் மக்களை வாட்டி வதைத்தனர். தன் வளர்ப்பு நாய்க்கு ஆடம்பரமாக திருமணம் செய்த சமஸ்தானம் உண்டு. தம் பிறந்த நாளில் தம்மை நிர்வாணமாக வழிபடச் சொன்ன ராஜா உண்டு. ஆடம்பர வாழ்வில் திளைத்தனர். மது, மாது என மயங்கிக் கிடந்தனர். வெளி நாட்டு மது பாட்டிலுக்கும் படுக்கை அறைக்கு வந்த மாதுவுக்கும் நிலத்தை இனமாகக் கொடுத்தனர். இந்து மன்னரோ, முஸ்லீம் மன்னரோ கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே ரகத்தில் இருந்தனர்.

பொதுவாய் இங்கிலாந்தில் மன்னர் அந்நாட்டு வருவாயில் 1600ல் ஒரு பங்கையே செலவிட முடியும். பெல்ஜியத்தில் 1000ல் ஒன்று;  இத்தாலியில் 500ல் ஒன்று; டென்மார்க் 800ல் ஒன்று;  ஜப்பான் சக்கரவர்த்தி 400ல் ஒன்று; நெதர்லாந்து ராணி 600ல் ஒன்று; நார்வே 700ல் ஒன்று  என ஓர் அளவுக்குள் செலவிட்டனர். நம்ம ஊர் ராஜாக்கள் வரைமுறை கேள்விமுறை இன்றி செலவிட்டனர். திருவிதாங்கூர் ராஜா 17ல் ஒரு பங்கை தன் சொந்த சுகபோகத்துக்கு எடுத்துக்கொண்டார். ஹைதராபாத், பரோடா ராஜாக்கள் 13ல் ஒரு பங்கு;  காஷ்மீர், பிகானிர் ராஜாக்கள் 5ல் ஒரு பங்கு;  சரிபாதி எடுத்த மன்னரும் உண்டு;  மூன்றில் ஒரு பாகம் எடுத்த ராஜாவும் உண்டு. 

பிரிட்டிஷாரை அடிபணிந்து சமஸ்தான ராஜாக்கள் எனில்; இந்த ராஜக்களைச் சார்ந்து ஒட்டுண்ணிகளாக அதிகார வர்க்கமும் புரோகித வர்க்கமும் ஆட்டம் போட்டன. ஆக பிரிட்டிஷார், சமஸ்தானம் என இரட்டை ஒடுக்குமுறையை மக்கள் அனுபவித்தனர். மக்கள் கொடுமை தாழாமல் வெகுண்டனர். காங்கிரஸ் கட்சியோ சமஸ்தானங்களில் தலையிடாமை எனும் கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானம் உள்ளிட்ட பலவற்றில் 1938-39களில் மக்கள் அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்தனர். விடுதலைப் போர்ப்பறை உரக்க முழக்கினர். காங்கிரஸ் களத்தில் ஒதுங்கி நின்றது. கம்யூனிஸ்டுகள் முன்கை எடுத்தனர். திருவிதாங்கூரில் இளைஞர் சங்கம் எழுந்தது. போராட்டம் வீச்சானது. திவான் சர் சி. பி. ராமசாமி ஐயர் அடக்குமுறையை ஏவினார். இளைஞர் சங்கம் தடை செய்யப்பட்டது.

மலபாரில் இருந்து ஏ.கே.கோபாலன் தலைமையில் திருவனந்தபுரம் நோக்கி எழுச்சி ஊர்வலம் புறப்பட்டது. கே.சி.ஜார்ஜ், முகமது யூசுப், கணபதி காமத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திவான் சிபி ராமசாமி ஐயர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார்.  இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஓர் பகுதி. சுயாட்சிப் போரில் அவர்களும் பங்கேற்றனர். இக்காலகட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது 12 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பலர் உயிர்ப் பலியாகினர்.

கம்யூனிஸ்டுகளின் எழுச்சி காங்கிரஸை அசைத்தது. அவர்கள் சற்று இறங்கி வந்தனர். சமஸ்தானங்கள் உள்ளிட்டு இந்தியா முழுமைக்கும் சுயாட்சி கோருவதாய் தீர்மானம் நிறைவேற்றியது. ஆயினும் சமஸ்தானங்களில் நடக்கும் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது. அதே சமயம் விரும்பும் காங்கிரஸ்காரர்கள் தம் சொந்தப் பொறுப்பில் பங்கேற்கலாம் என்றது. இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் சுட்டுவதைப் போல காங்கிரஸ் ஊழியர் பலர் ஆர்வமுடன் கம்யூனிஸ்டுகளோடு களமிறங்கினர். ஹைதராபாத்தில் நிஜாமுக்கு எதிரான போராட்டம் கம்யூனிஸ்ட் தலைமையில் புதிய பரிணாமத்தை நோக்கிச் சென்றது.