tamilnadu

img

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மீது ஆள் தூக்கிச் சட்டத்தை ஏவியது பாஜக அரசு

காஷ்மீர்,பிப்.7- காஷ்மீரில் வீட்டுக்காவலில் அடைக்கப் பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்  உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலை வர்கள் மீது  பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்கும் காஷ்மீர் மக்கள் மீதான மோடி அரசின்  அராஜகச் செயலுக்கும்  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மத்திய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அந்த மாநில மக்கள் சிறைக்குள் வைக்கப்பட்டிருப்பது போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். போதிய மருந்துகள் கூட கிடைக்காமல் நோயால் பாதிக்கப்பட்ட பலர் மிகவும் அவதியுற்றனர்.  முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான யூசுப் தாரிகாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்ப ட்டிருந்தனர். 

இதற்கிடையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா ஏற்கனவே பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட  சில அரசியல் தலைவர்கள்  170 என்ற சட்டப்பிரிவின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் படி ஒரு நபரை 6 மாதங்கள் மட்டுமே விசாரணையின்றி காவலில் வைக்க  முடியும். அதன்படி அந்த அரசியல் தலை வர்களின் வீட்டுக்காவல் வியாழக்கிழமை யுடன் முடிந்தது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீதான அராஜக நடவடிக்கையை மத்திய பாஜக அரசு தொடர்ந்துள்ளது. வீட்டுக்காவ லில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி மீது பிப்ரவரி 7 ஆம் தேதியன்று பொது பாதுகாப்புச்சட்டம் ஏவப்பட்டது.  தேசிய மாநாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாஹர்,  மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் சர்தாஷ் மத்னி மீதும் பொது பாதுகாப்புச்சட்டம் ஏவப்பட்டுள்ளது.  இதனால் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட் டோர்  கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.  பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்தவித விசாரணையும் இல்லாமல் ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்க முடியும்.

சிபிஎம் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மீது கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா  மற்றும் மெகபூபா முப்தி மீது கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. உமர் அப்துல்லா, பாஜக அரசாங்கத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர். மெகபூபா முப்தி இந்திய அரசமைப்புச்சட்டத்தின் கீழ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில கூட்டணி அரசாங்கத்தில் முதலமைச்சராக இருந்தவர். பிரதமர் மோடி, மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பதிலளிக்கும் சமயத்தில், இவ்விருவரும் அளித்துள்ள அறிக்கைகள் “ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறியிருந்தார். இவர் மேற்கோள் காட்டிய அறிக்கைகள்  “போலி செய்திகளைப்” பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு நையாண்டி இணையதளத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று இப்போது காட்டப்பட்டிருக்கிறது.  எனவே இவர் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஏதும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது

மோடி அரசாங்கமானது, இவ்வாறான பொய்ச் செய்திகளின் அடிப்படையில் மிகவும் மோசமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தினை ஏவியிருப்பது, ‘ஜம்மு-காஷ்மீரில் அனைத்தும் இயல்பான நிலைக்கு வந்துவிட்டது’ என்கிற கூற்றைப் பொய்யாக்குகிறது.  ஆறு மாதங்கள் கடந்த பின்பும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்கிறது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரங்கள் சீர்குலைந்திருக்கின்றன. நாளும் நடைபெறும் இயல்பு வாழ்க்கை நிலை என்பது இன்னமும் திரும்பவில்லை. இது, இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஓர் அவமானமாகும். 2019 ஆகஸ்ட் 4 அன்றிரவிலிருந்து கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஜனநாயக நடைமுறைகள் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)