tamilnadu

img

தில்லியில் தவிக்கும் தமிழர்கள்: கெஜ்ரிவாலுக்கு முதல்வர் கடிதம்

சென்னை, ஏப்.25- தில்லி மாநாட்டில் பங்கேற்க சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 559 பேருக்கும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி, தில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

தில்லியில் நடந்த, தப்லீக் ஜமாத் மாநாட்டில், தமிழகத்திலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களில், 183 பேர், எய்ம்ஸ் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமை முகாமில், 376 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள், தமிழக அரசுக்கு வரப் பெற்றுள்ளன.

தனிமை முகாமில் உள்ள சிலருக்கு, சர்க்கரை நோய் மற்றும் அதை சார்ந்த நோய்கள் உள்ளன. அவர்களுக்கு சரியான நேரத்தில், உணவு வழங்கப்படுவதில்லை. போதுமான வசதிகள் இல்லை என, தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ரமலான் நோன்பு துவங்க உள்ளதால், அவர்களுக்கு உரிய நேரத்தில், உணவு மற்றும் மருந்து வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.