புதுதில்லி, அக். 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுதில்லி, இந்திரஜித் குப்தா வீதியில் கட்டப்பட்டுள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவன் கட்டிடத்தை பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அக்டோபர் 2 அன்று திறந்து வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தர மத்தியப் பள்ளிக்கூடம் இயங்க இருக்கிறது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிமன் பாசு, தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் சிலையைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வுகளை பிரகாஷ் காரத் துவக்கி வைத்தார். பின்னர் விழாவில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தன்று நாம் சுர்ஜித் பவனைத் திறக்கிறோம். காந்தியின் சிந்தனைகளும், அரசமைப்புச் சட்டமும் இன்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்தியாவை, தீவிர வலதுசாரிப் பாதையில் செலுத்தவிரும்புகிறவர்கள் இத்தகைய தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடதுசாரிகளால் மட்டுமே பதில் அளித்திட முடியும். அதனை நாம் செய்திடுவோம். நம் மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக, பதின்பருவ வயதில் தோழர் சுர்ஜித்தை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்ய வந்தபோது, அவர்களிடம் தோழர் சுர்ஜித், தன் பெயரை, லண்டன்-தோட் சிங் என்றார். விடுதலைப் போராட்ட வீரராகவும், கம்யூனிஸ்ட்டாகவும் வாழ்ந்த அவர் வாழ்வும் பணியும் நம் அனைவருக்கும் என்றென்றும் முக்கியமான படிப்பினைகளாக அமைந்திடும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா வந்திருந்து, வாழ்த்துரை வழங்கினார். ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவன், கட்சியின் மத்தியக் குழுவின் நிரந்தர உறைவிடக் கட்சிப் பள்ளியாக அமைந்திடும். சுமார் 200 தோழர்கள் தங்கி பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தங்குமிடம், வகுப்பறை, நூலகம், உணவகம், நவீன ஆடிட்டோரியம், கூட்ட அரங்கம் என உறைவிடப் பள்ளிக்கான அனைத்து வசதிகள் ஒருங்கே அமையப் பெற்றிருக்கிறது.