புதுதில்லி, அக்.14- பண மதிப்பு நீக்கத்திற்குப் பின் புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் புதிய வடிவங்களில், புதிய வண்ணங்களில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்தது. ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த சில மாதங்களாக புழக்கம் இல்லாமல் குறைந்து போனது. ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதும் குறைந்தது. சமீபகாலமாக பல இடங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஆங்கில நாளிதழ் ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தது. அதற்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ள பதிவில், கடந்த 2016-17ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது 3,542.991 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன. 2017-2018ம் ஆண்டு 111.507 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன. 2018-2019ம் ஆண்டு 46.690 கோடி எண்ணிக்கை யில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. ஆனால் 2019-20ம் நிதி ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்படவில்லை என கூறியுள்ளது.
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டில் 3,363 மில்லியன் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை புழக்கத்தில் இருந்தன. இது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை மதிப்பில் 3.3 சதவீதம். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை புழக்கம் 3,291 மில்லியனாக குறைந்துள்ளது. மொத்த ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கையில் 3 சதவீதமாக குறைந்துள்ளது.