tamilnadu

img

கிருமி நாசினிக்கு தடை விதிப்பது குறித்து 30 நாட்களில் வழிகாட்டுதலை வெளியிடுக... மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி:
 மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த கிருமி நாசினியைநாடு முழுவதும் தடை விதிப்பது குறித்து அடுத்த 30 நாட்களில் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உலகம் முழுவதும் நிலவுகிறது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகளில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில் தற்பாதுகாப்புக்காக கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இதில் மக்கள் கூடும் பொது இடங்களில்பெரிய அளவிலான கிருமி நாசினி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அதற்குள் மனிதர்கள் உள்ளே சென்று வெளியேரும் போது உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த முறை மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்   மனித உடலுக்கு தீங்குவிளைவிக்கும் கடுமையான ரசாயனம் கலந்த கிருமி நாசினிக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  கர்சிம்ரன் சிங் நருலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக்பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில்,  மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கடுமையான ரசாயனம் கொண்ட கிருமி நாசினிகளை நாடுமுழுவதும் தடை செய்யலாமா என்பது குறித்து 30 நாட்களில் ஒரு விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இதில் மனித உயிர்களை காக்கும் அடிப்படை உரிமை அரசுக்கு உள்ளது. ஆனால் இதற்காக 29 நாட்கள் வரை காத்திருந்து விட்டு கடைசி நேரத்தில் காரணம்தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.