புதுவையில் மக்களவை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவை மே 24-ஆம் தேதி அன்றுதான் வெளியிட முடியும் என்று புதுச்சேரியின் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரான அருண் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி அருண் கூறுகையில், ”ஒவ்வொரு தொகுதியிலும் 5 வி.வி.பேட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான தொகுதி என மொத்தம் 155 வி.வி.பேட் எந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் 23-ஆம் தேதி எண்ணப்படும். ஒரு வி.வி.பேட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். இதனால் சுமார் 25 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை வெளியிட முடியும். அதன்படி தேர்தல் முடிவுகள் மே 24-ஆம் தேதி அன்று, காலை 9 மணிக்கு பின்னர் வெளியிடப்படும். ஆனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிவானது மே 23-ஆம் தேதி அன்று வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்