tamilnadu

img

இந்திய பிரதமர் பிளவு வாதிகளின் தலைவர் : ‘டைம்’ இதழின் அட்டைப்பட கட்டுரையில் கடும் விமர்சனம்

வாஷிங்டன்:

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற செய்தி இதழான ‘டைம்’ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஆதிஷ் தஷீர் என்பவர் எழுதியுள்ள அந்த கட்டுரை, பிரதமர் மோடியை ‘பிளவுவாதிகளின் தலைவர்’ என்றும், ‘மோடி ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லை’ என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.


“இந்தியாவின் மிக முக்கிய அடிப்படை கட்டமைப்புகளான, மாநில சுயாட்சி, அதன் நிறுவன தலைவர்கள், சிறுபான்மையினரின் நிறுவனங்கள் மற்றும் இடங்கள், மீடியாக்கள், பல்கலைக்கழகங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தும் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன” என்றும், “நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் முற்போக்குவாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எவரும் தப்பவில்லை” என்றும் ‘டைம்’ பத்திரிகை கூறியுள்ளது.

மேலும், “2014 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின் போது பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை மோடி முன்வைத்ததார்; ஆனால் அவரது மாயாஜாலம் பலிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ள டைம் இதழ் மோடி, மதம் சார்ந்த தேசியவாதத்தை இந்தியாவில் உருவாக்கி விட்டடதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளது.


“2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவுக்கான ஒரு மீட்பர் போல பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதால், மறுபடியும் தேர்தலை சந்திக்க கூடிய, ஒரு சாதாரண அரசியல்வாதி போலத்தான், மோடியும், மக்களால் பார்க்கப்படுகிறார்” என்று கட்டுரையை முடித்துள்ளது.


2012-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரது படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு, மிகப்பெரும் சக்தியாக அவர் உருவாகிக் கொண்டு இருப்பதாக கூறியிருந்தது. மோடி பிரதமரான பின்பும், 2015-ஆம் ஆண்டு அவரிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றையும் நடத்தி, இதனை டைம் இதழில் வெளியிட்டிருந்தது.தற்போது அதே ‘டைம்’ பத்திரிகையானது, மோடியின் ஆட்சியில் இந்தியா படுமோசமான நிலைக்கு போய்விட்டதாக சாடியுள்ளது. இன்னும் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ‘டைம்’ பத்திரிகையின் கட்டுரை, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


;