நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என 6 முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
நீட் தேர்வு அச்சத்தால் கடந்த சனிக்கிழமை மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை நடத்தும் நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது என நீட் மரணங்கள் குறித்த தனது அறிக்கையில் விமர்சித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் என்னுடைய கருத்துப்படி அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும் நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறை மதிப்புக்குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்
இந்நிலையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை இல்லை என 6 முன்னாள் நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். முன்னாள் நீதிபதிகள் சந்துரு, கே.என்பாஷா, டி.சுதந்திரம், அரி பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் இணைந்து நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியதைப்போல சூர்யா மீது நடவடிக்கை எடுக்க அவசியமில்லை என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
மேலும் 3 மாணவர்கள் தற்கொலை காரணமாக சூர்யா கூறிய கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சூர்யா அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை வழங்குகிறார் . சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டு விடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று நீதிபதிகள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.