tamilnadu

img

373 தொகுதிகளில் குளறுபடியான வாக்குப்பதிவு

புதுதில்லி:
17-ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு, அதன் முடிவில், 350 இடங்கள் வரை, பாஜக கூட்டணி வெற்றிபெற்றதன் அடிப்படையில், மோடி பிரதமராகவும் பதவியேற்று விட்டார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். துறைகளும் பிரித்து வழங்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக, தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளறுபடிகள் தொடர்பான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.ஓரிரு இடங்களில் அல்லாமல், இந்தியா முழுவதும் சுமார் 373 தொகுதிகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ள தெரியவந்துள்ளது. அதாவது, வாக்கு இயந்திரத்தில், தேர்தல் நாளன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ‘தி குயிண்ட் ’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை; வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் இரண்டு விதமான எண்ணிக்கை விவரம் தரப்படுகிறது. அந்த அடிப்படையில், முதல் 4 கட்டங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்ட 373 தொகுதிகளில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், வாக்குப்பதிவன்று எண்ணப்பட்ட வாக்குகளும் பொருந்திப் போகவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் 10 லட்சத்து 88 ஆயிரத்து 206 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், 10 லட்சத்து 98 ஆயிரத்து 112 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதாவது, கூடுதலாக 9 ஆயிரத்து 906 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன?பீகாரின் அவுரங்காபாத்திலும், இதேபோல நடந்துள்ளது. இங்கு பதிவானது 9 லட்சத்து 30 ஆயிரத்து 758 வாக்குகள்தான். எண்ணப்பட்டதோ 9 லட்சத்து 39 ஆயிரத்து 526 வாக்குகள். இங்கு கூடுதலாக எண்ணப்பட்ட வாக்குகள் 8 ஆயிரத்து 768.

அருணாச்சல் மேற்குத் தொகுதியில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 161 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இங்கு எண்ணிக்கையின்போது, 7 ஆயிரத்து 961 வாக்குகள் இருந்துள்ளன. அதாவது 3 லட்சத்து 44 ஆயிரத்து 122 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.தமிழகத்தில் மட்டும் 5 தொகுதிகளில், பதிவானதை விட அதிகமான வாக்குகள் இருந்துள்ளன.
காஞ்சிபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 14 ஆயிரத்து 86. எண்ணப்பட்ட வாக்குகளோ 12 லட்சத்து 32 ஆயிரத்து 417. அதாவது, பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் 18 ஆயிரத்து 331 அதிகம். தருமபுரி தொகுதியில் பதிவான வாக்குகள் 11 லட்சத்து 94 ஆயிரத்து 440. எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையோ 12 லட்சத்து 12 ஆயிரத்து 311. இங்கு வித்தியாசம் 17 ஆயிரத்து 871. இதேபோல ஸ்ரீபெரும்புதூரில் 14 ஆயிரத்து 512 வாக்குகளும், தென்சென்னையில் 11 ஆயிரத்து 729 வாக்குகளும், திருவள்ளூரில் 8 ஆயிரத்து 228 வாக்குகளும் கூடுதலாக வந்துள்ளன.

பதிவான வாக்குகளை விட, எண்ணப்பட்ட வாக்குகள் கூடுதலாக இருந்தது ஒருபுறமென்றால், பதிவான வாக்குகளைக் காட்டிலும், எண்ணும்போது வாக்குகள் குறைந்துபோன சம்பவமும் நடந்துள்ளது.திரிபுரா மேற்குத் தொகுதியில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 138 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், எண்ணும்போது 11 லட்சத்து 1362 வாக்குகள்தான் இருந்துள்ளன. 19 ஆயிரத்து 776 வாக்குகளைக் காணவில்லை.ஒடிசாவின் கியோஜார் தொகுதியில் 11 லட்சத்து 84 ஆயிரத்து 697 வாக்குகள் பதிவாகியிருந்தது. எண்ணப்பட்டதோ 11 லட்சத்து 73 ஆயிரம் வாக்குகள் மட்டுமே. 11 ஆயிரத்து 171 வாக்குகளைக் காணவில்லை. அதே ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் தொகுதியிலும் 8 ஆயிரத்து 50 வாக்குகள் குறைந்திருக்கின்றன. இங்கு 10 லட்சத்து 11 ஆயிரத்து 754 வாக்குகள் பதிவாகியிருக்க, 10 லட்சத்து 3704 வாக்குகளுக்குத்தான் கணக்கு வந்திருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகள் சில உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டுமொத்தமாக பார்த்தால், சுமார் 370 தொகுதிகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளன. 
இந்த குளறுபடி தொடர்பாக, கருத்து தெரிவித்திருக்கும் அதிகாரி ஒருவர், 6 மணி வரை பதிவான வாக்குகள் மட்டுமே முதலில் சொல்லப்படும். அதன்பிறகு எண்ணும்போதுதான் பதிவான வாக்குகள் துல்லியமாக தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி கூறுவதுபடி பார்த்தாலும், வாக்குகள் கூடுவதற்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது. 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று வாக்குகள் எப்படி குறைந்துபோகும்? என்பதற்கு விடையில்லை. தேர்தல் ஆணையம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.