tamilnadu

img

வெற்றிகரமாக முடிந்தது மேதா பட்கரின் உண்ணாவிரதம்

போபால், செப்.3- குஜராத் மாநில அரசின் அணை திட்டத்தை எதிர்த்து கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதமிருந்த மேதா பட்கர், அரசு கோரிக்கைகளுக்கு செவிசாய்த்ததை தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூடவும், அணையின் நீர்மட்டத்தை 138.68 மீட்டராக உயர்த்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அணை திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் பட்வானி மாவட்டத்தில் நர்மதாவின் கரையில் உள்ள கிராமத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பட்வானி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும் போராட்டத்தில் களமிறங்கினர்.

அணையின் நீர் மட்டத்தைக் குறைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான மறுவாழ்வு செய்யவும் குஜராத் அரசாங்கத்தையும் மத்திய அரசையும் கட்டாயப்படுத்துமாறு மத்தியப் பிரதேச அரசாங்கத்தை மேதா பட்கரின் நர்மதா பச்சாவ் அந்தோலன் (என்.பி.ஏ) இயக்கம் வலியுறுத்தியது. மேதா பட்கர் போராட்டத்தை கைவிடுமாறு மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன் சில நாட்களுக்கு முன்பு போராட்ட இடத்திற்கு நேரில் வந்து கோரிக்கை விடுத்தார். ஆனால் மேதா பட்கரும் போராட்டக்கா ரர்களும் தங்கள் அறப்போரை கைவிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்தது. மத்தியப் பிரதேச அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.சி.பஹரை மத்தியப் பிரதேச முதல மைச்சர் கமல்நாத் மேதா பட்கரிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட அனுப்பியுள்ளார். அதே சமயம், மேதா பட்கருக்கு விளக்கமளிக்கும் வகையில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை அறிந்து தீர்ப்பதற்கு தனது அரசாங்கம் என்பிஏ(நர்மதா பச்சாவ் அந்தோலன்)உடன் தொடர்ந்து செயல்படுவதாக கூறினார்.

சர்தார் சரோவர் திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான திட்டம் என்றும் எந்த ஒரு மாநிலமும் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியாது என்றும்  முதல்வர் கூறினார். மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு குறித்து முன்னர் நிராகரிக்கப்பட்ட கூற்றுகளை மறு பரிசீலனை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தனது அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், 115 குடும்பங்கள் தலா ரூ .60 லட்சம் இழப்பீடு பெற தகுதியுள்ளவையாக இருப்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது என்றும் கமல் நாத் கூறினார். மேலும், குஜராத்தின் முடிவை மத்தியப் பிரதேச அரசு எதிர்ப்பதாகவும் கூறினார். பாதிக்கப்பட்டவர்க ளின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு கோரிக்கை களை ஆராய நர்மதா பள்ளத்தாக்கின் கிராமங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கமல் நாத் கூறினார். இது பற்றியும் சர்தார் சரோவர் அணையில்  நீர்மட்டத்தை குறைப்பதற்காக மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் எஸ்.சி.பஹர் நேரில் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, மேதா பட்கர் திங்கள் நள்ளிரவில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். சர்தார் சரோவர் அணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிர தத்தை முடிவுக்கு கொண்டுவர, மேதா பட்கருக்கு பெஹர் எலுமிச்சை சாற்றை வழங்கினார்.