tamilnadu

img

பட்ஜெட்டே இல்லாத மிக நீளமான பட்ஜெட் உரை ஏழைகளிடமிருந்து மேலும் உறிஞ்சி பெரும் பணக்காரர்களிடம் செல்வத்தை குவிக்கும் திட்டங்கள்

புதுதில்லி, பிப். 2 - பட்ஜெட் என ஒன்று இல்லாமலே 2 மணி நேரம் 41 நிமிடத்திற்கும் அதிகமாக மத்திய நிதி அமைச்சர் மிக நீளமான பட்ஜெட் உரையை ஆற்றிவிட்டார்; அதில் நீங்கள்  சொன்னது ஏதுமில்லை; ஆனால் பேச்சு மட்டும் பெரும் பேச்சாக அமைந்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சாடினார். சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதன்பின்னர் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: இந்த பட்ஜெட், நடப்பு நிகழ்வாக இருக்கும் மிகக்கடுமை யான பொருளாதார மந்தம் தொடர்பாக எதையும் பேச மறுத்துவிட்டது. அதற்கு எப்படி தீர்வுகாணப் போகிறார்கள் என்ற திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் அதில் தெரியவில்லை. இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையின் விளிம்பை தட்டி நிற்கிறது; அதை மீட்பதற்கு மக்களின் நுகர்வு அதிகரிக்கப்பட வேண்டும்; அதை எப்படி செய்வது என்ற மிக மிக முக்கியமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்சொல்ல தவறிவிட்டார். அதுமட்டுமல்ல, உண்மையில் பொருளாதார நிலையின் நிலவரம் என்ன என்கிற உண்மையான புள்ளிவிபரங்களை நாட்டு மக்களின் பார்வையிலிருந்து மறைக்கும் விதமாகவே அவரது உரை அமைந்திருக்கிறது. வரி வருவாய் மிகச்சரியாக எவ்வளவு வந்திருக்கிறது என்பதை பட்டியலிடுவதற்குப் பதிலாக, ரிசர்வ் வங்கியிலிருந்து மடைமாற்றி அரசு எடுத்துக் கொண்ட ரூ.1.76 லட்சம் கோடி தொகையையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலமாக கிடைக்கப்பெற்ற தொகையையும் வரவாகக் காட்டியுள்ளார்.  இது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக நாடும் நாட்டு மக்களும் அவரது உரையை கேட்டதுதான் மிச்சம். இந்த உரையில் மிக மிக ஆபத்தான அம்சம், எல்ஐசி மற்றும் இன்சூரன்ஸ் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது என்பதாகும். நாட்டின் மாபெரும் சொத்துக்களாக இருக்கும் எல்ஐசி போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பது மிக மிக அதீதமான நடவடிக்கையாகும். இந்த முடிவுக்கு எதிராக நாட்டு மக்களின் போராட்டங்களை கூர்மைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் அழைப்புவிடுக்கிறோம். அதேபோல நாட்டின் மிகப்பெருவாரியான மக்களை துன்பதுயரத்தில் ஆழ்த்தியுள்ள வேலையின்மை, விவசாய நெருக்கடி, கிராமப்புற கூலி மிகக்கடுமையாக குறைந்திருக்கக்கூடிய துயரநிலைமை உள்ளிட்ட எந்தப் பிரச்சனைக்கும் பட்ஜெட் உரையில் தீர்வுகள் இல்லை. வெற்று முழக்கங்களும், வார்த்தை ஜாலங்களும்தான் அந்த உரையில் நிரம்பியிருந்தது. இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார கோடீஸ்வரர்களாக இருக்கக்கூடிய வெறும் ஒரு சதவீதம்பேர், நாட்டின் மக்கள்தொகையில் 70சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் சொத்துக்களோடு ஒப்பிடும்போது அதைவிட நான்குமடங்கு அதிகமாக செல்வங்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள். அவர்களை மேலும் செல்வந்தர்களாக மாற்ற உதவுகிற திட்டங்களைத்தான் பட்ஜெட் உரை உள்ளடக்கியிருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு இதில் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.கே.ரங்கராஜன், மக்களவை குழு தலைவர் பி.ஆர்.நடராஜன், மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.