tamilnadu

img

ஜேஎன்யுவின் மாணவர்களில் 40% பேர் இந்த கல்வி அமைப்பால் முற்றிலுமாக கைவிடப்படுவதற்கு கட்டண  உயர்வு வழிவகுக்கும் - பர்னல் சிர்முலே

உயர்கல்விக்கான அரசு நிதியுதவி  பற்றி பேசுகின்ற பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களை சில ஊடகங்களும், பொதுமக்களில் சிலரும் கடந்த சில ஆண்டுகளாக திரும்பத் திரும்ப கடுமையாக இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். இருந்த போதிலும்  தங்களுடைய கருத்தை திரும்பப் பெற மறுத்து, வளாகங்களிலிருந்து வெளியேறி அரசு நிதியுதவியுடனான உயர்கல்வியை அனைவரும் சமமாக அணுகுவதற்காக மாணவர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.  அவர்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருக்கின்ற சிலருக்கு வழிவகுக்கும் வகையில்,  மக்களில் பெரும்பான்மையினரை ஒதுக்கி வைக்கின்ற கல்விக் கொள்கைகளுக்கு  அடிபணிய மறுக்கிறார்கள். உயர் கல்வி குறித்து முன்வைக்கப்படுகின்ற உரையாடல்களில் நன்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ள, பணம் பெற்றுக் கொண்டு செயல்படுகின்ற ட்ரோல்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் பொய்களால் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்ற நிலையில், இந்த மாணவர்களின் விடாமுயற்சியின் பின்னணி வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.  
வரி செலுத்துவோரின் பணத்தில் பிழைப்பை நடத்த விரும்பும் சோம்பேறிகள், எதற்கும் கையாலாகாதவர்கள் என்று அரசு நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் குறித்து ஒரே மாதிரியான கருத்துக்களை  உருவாக்குவதில் ஆளும் கட்சி, அதன்  ஆதரவாளர்களின் ஆதரவும் இருக்கிறது. தங்கள் சொந்த வாழ்க்கைக்குத் தேவையானதை சம்பாதிக்காதவர்கள், கல்விக் கட்டணம் செலுத்தாதவர்கள் என்று "வரி செலுத்தும் பொதுமக்கள்" என்ற பெயரால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற ஆய்வு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மீது மீண்டும் மீண்டும்  குற்றம்  சுமத்தப்படுகின்றது. இந்த மாணவர்களின் கல்விக்காக செலவிடப்படும் பணம் “வீணானது”  என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. இந்த  அரசாங்கத்தின்  கல்விக்  கொள்கைகளின் உண்மைத் தன்மையை  தெளிவுபடுத்துவதற்கு அவர்களின் இந்த வாதமே உதவுகிறது.
தெருவோர  வியாபாரியின் குழந்தை, முன்னாள் காவலர், மும்பை சேரி பகுதியைச்  சேர்ந்த  இளம் பெண் என்று ஒவ்வொருவரும் பற்றாக்குறை என்ற குழியிலிருந்து வெளியேறி,  தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளியைக் கடப்பதற்கு உதவக்கூடிய கல்வியைப் பெறும் வகையில், அனைவரையும் உள்ளடக்குகின்ற உயர் கல்வியை சமமாக அணுகுவதே ஒருவரின் வாழ்க்கையை  சிறப்பானதாக மாற்றும் என்ற உண்மையில் இருந்து  கவனத்தை  திசை திருப்பவே இந்த வாதம் முயல்கிறது. சமத்துவமின்மையை  சீர்குலைப்பது என்பது சாதி, பாலினம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக பிளவுகளின் தோள்களில் வெற்றிகரமாக ஏறி நிற்கின்ற ஆளுகின்ற அரசை பயமுறுத்துகிறது. அதனால்தான், இதுபோன்ற ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு இடைவிடாமல்  அவர்கள் தீனி போட்டு வருகிறார்கள். அதன் விளைவாகவே விளிம்புநிலையில் உள்ளவர்கள், வறியவர்கள் மீது நடத்தப்படுகின்ற அடக்குமுறை  நாடகத்தை கண்மூடி பார்க்கின்ற பார்வையாளர்களாக அவர்கள் தொடர்கிறார்கள்.
மனதைப் புண்படுத்துகின்ற இத்தகைய விஷயங்களைக் கடந்து போகும் வகையில் சில கடினமான கேள்விகளைக் கேட்பதற்கு சில உண்மைகள் உதவக் கூடும். 2019  பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையின்படி, இடைநிலை மற்றும்  உயர் கல்விக்கான வரித்தீர்வை ரூ .94,036 கோடி, ஆய்வு மற்றும்  மேம்பாட்டுக்கான வரித்தீர்வை ரூ.7,298 கோடி  அளவிற்கு செலவிடப்படாமலேயே எஞ்சியிருக்கிறது. இந்த  பணம்  எங்கே  போகிறது?  சமீபத்திய  வாரங்களில்  மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்த, துணை ராணுவம் மற்றும் காவல்துறை கொண்டு எங்கள் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு காரணமான ஜேஎன்யூவின் கட்டண உயர்வு செயல்படுத்தப்பட்டால், இங்கே பயிலும் மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த கல்வி  அமைப்பால் முற்றிலுமாக  கைவிடப்படுவார்கள். மேலும் நாட்டிலேயே மிக அதிகமாக கடணம் வசூலிக்கும் அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக ஜேஎன்யூ மாறி விடும்.
இந்த இடத்தில், வரி செலுத்துபவர்களின் பணம் எங்கே போகிறது  என்ற  கேள்வியை இன்னும்   கூர்மைப்படுத்தலாம். 2017-18 கல்வியாண்டில் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற, புகழ்பெற்ற ஆய்வுப் பத்திரிகைகளில் 1,000 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட, பொதுமக்களும் கலந்து கொள்கின்ற வகையில் 1,086 சிறப்புரைகள் ஏற்பாடு செய்த, 4,594 எம்.பில் மற்றும் பி.எச்.டி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கான மொத்தச் செலவு  என்பது ரூ.556  கோடியாக இருந்தது. இதனை மத்திய அரசு மற்றும் அதன் திட்டங்களின் விளம்பரங்களுக்காக மட்டும் செலவிடப்பட்ட ரூ.1,313 கோடியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசால் தரப்படுகின்ற முன்னுரிமைகளில்  ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜேஎன்யூவில் ஆய்வு உதவித் தொகை பெற்ற  சுமார் 2,500 மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு வீட்டு வாடகைப்படியாக  மட்டும் மாதத்திற்கு  ரூ .7,500 (ஆண்டுக்கு ரூ. 22.5 கோடி) செலுத்தியிருக்கின்றனர்.  தேசிய வளங்களை வீணாக்கியதற்காக ஜேஎன்யூ மீது டெல்லி  உயர்நீதிமன்றம்  குற்றம் சாட்டிய போதிலும், கடந்த  இரண்டாண்டுகளில் மட்டும்  எம்ஃபில் / பி.எச்.டி (குறிப்பாக  இட ஒதுக்கீட்டு) இடங்கள்  காலியாக  விடப்பட்டுள்ளன.  அவ்வாறு மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டதற்கு எதிரான  போராட்டம், இப்போது கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்துடன்  இணைந்திருப்பது அனைவரையும் உள்ளடக்கிய, பிரதிநிதித்துவ  உயர்கல்வியை  தற்போதைய அரசாங்கம் அழித்துக் கொண்டிருப்பதையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றது. இந்த ஏற்றத்தாழ்வின் ஆழ்ந்த  பிரதிபலிப்பாக இருக்கிற தேசிய கல்விக் கொள்கை (NEP) - 2019ஐ ஜேஎன்யூ  மற்றும்  பிற கல்வி வளாகங்களில் உள்ள  மாணவர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்த கல்விக் கொள்கை அரசு நிதியுதவி பெறுகின்ற கல்வியை சமமாக அணுகுவதை திட்டமிட்டு வேண்டுமென்றே இல்லாமல் செய்வதைத் தவிர  வேறெதையும் செய்யவில்லை. அது ஏன் என்று பார்க்கலாம்.
பல்கலைக்கழக மானிய குழுவை (யுஜிசி) மாற்றி உயர்கல்வி நிதி ஆணையம் (ஹெஃபா) என்ற அமைப்பை உருவாக்குவதாகச் சொல்கின்ற இந்த அரசாங்கத்தின் நோக்கம், உயர் கல்வி நிறுவனங்கள் மானியங்களின் உதவியால் செயல்படுவதை மாற்றி, சமூகம் சார்ந்த பொருள் என்பதாக இருக்கின்ற கல்வியை சந்தைப் பொருளாக மாற்றியமைக்கும் விதத்தில் கட்டண உயர்வு மற்றும் “உள் வள உருவாக்கம்” மூலம் மீட்கப்பட வேண்டிய  கடன்களின் வழியாக அவற்றைச் செயல்பட வைப்பதாகவே இருக்கிறது.
உயர்கல்வி நிதி ஆணையத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2019இன் நோக்கம் மற்றும் வழிமுறைகளுக்கும், அனைத்து மட்டங்களிலும் மனித உரிமைகள், சமூகம், பொருளாதாரம் மற்றும் பிராந்திய வேறுபாடுகளைக் கட்டுப்படுத்துகின்ற பல நாடுகளின் கல்விக் கொள்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் உலகளாவிய மனிதநேய மதிப்பீடுகளுக்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை. சொல்லப் போனால், சராசரி தனிநபர் வருமானம் இந்தியாவை விட மிக அதிகமாக இருக்கின்ற பல நாடுகளிலும் பல்கலைக்கழக கல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது.  கல்வி என்பது உரிமைகள் மற்றும் தேவைகளால் வரையறுக்கப்படுகிறது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசு நிதியின் மூலம் அளிக்கப்படும் கல்விக்கான சமமான அணுகலை  அரசின் கல்விக் கொள்கை உருவாக்கித் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .ஆனால் தனிநபர்களை பொருளாதார  நடவடிக்கைகள் என்ற  நெருப்பைத் தூண்டி விடுபவர்களாக காண்கிற தேசிய கல்விக் கொள்கை - 2019க்கு உந்துதலாக இருக்கின்ற "நான்காவது தொழிற் புரட்சி" என்பதற்கு அப்பால் அந்த கல்விக் கொள்கையில் வேறெதுவுமில்லை. மலிவான உழைப்பை உற்பத்தி செய்து அடிமட்டத் தொழிலாளிகளின் கடுமையான உழைப்பை சுரண்டுவதைத் தவிர கல்வி குறித்து வேறெந்த செயல்பாட்டையும் அதில் காண முடியவில்லை.
கல்விக்கான  உரிமை என்பதை கல்வியிடம் இருந்து விலக்கி விட்டு கல்வியை ஒரு பண்டமாக மாற்றுவதையே இந்த கல்விக் கொள்கை செய்கிறது. இன்றைய உலகில், இன்றைய காலகட்டத்தில், லாபம் ஈட்டுகின்ற தனியார்களிடமிருந்து  கல்வியை வாங்க முடிகிற சிறிய பகுதியினருக்கு மட்டும் கல்வி கிடைக்கின்ற, அடிப்படைக் கல்வியைக் கூட எட்ட முடியாத ஆடம்பரமாக மாற்றுகின்ற வகையில் மிகப் பெரிய ஓட்டை இருக்கின்ற வலையையே  இந்தக் கல்விக் கொள்கை  உருவாக்குகிறது. கடந்த 45 ஆண்டுகளில் வேலையின்மை மிக அதிகமாக இருக்கின்ற  பொருளாதார நிலையைப் பார்த்தால், இந்த  ஆடம்பரத்தை  வாங்கிவிட முடியும் என்று நம்புகின்ற  சமூகத்தின் அடிப்பகுதியில் இருப்பவர்களும் இதிலிருந்து விலகியே நிற்க வேண்டியுள்ளது. அரசு நிதியுதவி அளிக்கின்ற கல்வி இல்லாத நிலையில், பெற்றோர்களும் மாணவர்களும் கல்விக் கடன்களின் திசை நோக்கிச் சென்று, வாழ்நாள் முழுவதும்  கடன்பட வேண்டியிருக்கும். இது  நடுத்தர வர்க்கத்தினருக்கு கூட  கல்வியை எட்டாது செய்து விடும்.
இதனால்தான் நாட்டில் உள்ள கல்வி வளாகங்களின் வழியாக  தேவைப்படுகின்ற மோதல்களாக பரவி வருகின்ற போராட்டத்தில் தடுப்புகளுக்கு முன்பாக நின்று தங்களுடைய உரிமைகளை உறுதி செய்து கொள்வதன் மூலம், எதிர்காலத் தலைமுறையினர்  கடன் மற்றும் கல்வியறிவின்மை ஆகியவற்றிற்கு இடையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக உறுதியான, அனைவராலும் எட்டக் கூடிய கல்வியை உரிமையைப் பெற முடியும் என்ற நிலையை அடைய வேண்டுமென்றே ஜேஎன்யூ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் விரும்புகிறார்கள். இப்போது அவர்களின் குரலை நாம் கவனித்துக் கேட்க வேண்டும்.  

நன்றி: https://indianexpress.com/article/opinion/columns/jnu-protest-fee-hike-6129251/ 

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு விருதுநகர்