tamilnadu

img

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் அதிகாரிகள் மீது குறி வைப்பதா?

புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, சட்டத்துக்குப் புறம்பான வகையில் வெளிநாட்டில் இருந்து ரூ. 305 கோடி முதலீடு வருவதற்கு உதவியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்தியமுன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 17-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மைதான் என்றால், அதிகாரிகளில் ஒருவரைக் கூட கைது செய்யாமல் இருப்பதன் மர்மம் என்ன? என்றுசிதம்பரம் தரப்பில் மட்டுமன்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங்கும் இதே கேள்வியை அண்மையில் எழுப்பியிருந்தார்.ஆனால், மத்திய அரசு நீண்ட மவுனம் காத்து வந்தது. இதனிடையே, திடீரென நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர், சிறு, குறு, நடுத்தரத் தொழில் கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே பூஜாரி, நிதியமைச்சகத்தின் இயக்குநர் பிரபோத்சக்சேனா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் ரவிந்திரநாத் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு அனுமதி வழங்கியுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 முன்னாள் அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக கவலை தெரிவித்து, மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிகள் 71 பேர் பிரதமர் மோடிக்குக் கடிதம்எழுதியுள்ளனர்.மத்திய அரசின் முன்னாள் செயலாளர் கே.எம். சந்திரசேகர், வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை முன்னாள் செயளர் சுஜாதா சிங், பஞ்சாப் முன்னாள்டிஜிபி ஜூலியோ ரிபேரியோ ஆகியோர்இந்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.

“ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 4 ஓய்வு பெற்ற அதிகாரிகளும் குறுகியஅரசியல் நோக்கத்துக்காக குறிவைக்கப்படுகிறார்கள். அன்றைய சூழலில் இருந்த அரசின் கொள்கையைத்தான் அவர்கள் செயல்படுத்தினார்கள். அரசியல் ரீதியாக ஆதாயம் அடைவதற்காக அதிகாரிகள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தற்போது நாட்டுக்காக சிறப்பாகச் சேவை செய்த அதிகாரிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத சூழல் இருக்கிறது. நேர்மையான, கடினமாக உழைக்கும் அதிகாரிகளைக் குறிவைத்து தண்டனை அளித்தால் பணிசெய்து கொண்டிருக்கும் அதிகாரிகளும் மனரீதியாகப் பாதிக்கப்படுவார் கள்.” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.