tamilnadu

img

ரூ.12 லட்சம் கோடியை இழந்த இந்திய பங்குச் சந்தைகள்!

புதுதில்லி:
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, கடந்த 60 நாட்களுக்குள் மட்டும், பங்குச்சந்தையானது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக மேலும் கூறப்படுவதாவது:

கடந்த 2004 மே 14 முதல் 2009 ஜூலை 24 வரை,மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும், பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலம் தொடங்கியபோதும், மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு 203 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சியில் இருந்துள்ளது.ஆனால், 2014 மே 23 முதல் 2019 ஜூலை 23 வரை, மோடிதலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில், இந்த வளர்ச்சி வெறும் 54 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையிலும் இதே நிலையே இருந்துள்ளது.அதுமட்டுமன்றி, மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த, கடந்த 60 நாட்களில் சென்செக்ஸ் 1800 புள்ளிகள் அளவிற்கு சரிந்துள்ளன.எச்.டி.எப்.சி. வங்கி, இன்போசிஸ் நிறுவனம், ஐசிஐசிஐவங்கி, ரிலையன்ஸ் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி,கோடாக் வங்கி, அதானி குழுமம் ஆகியவை பொதுவாகவேசந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பெருநிறுவனங்கள் ஆகும்.இவற்றின் பங்கு மதிப்பு லாபகரமாகவே இருந்து வருகிறது.

ஆனால், மகிந்திரா, டாடா மோட்டார், டாடா ஸ்டீல்,ஹீரோ மோட்டார், ரிலையன்ஸ் கேபிடல், வோடோபோன் ஐடியா, மாருதி, சன் டி.வி., ஓஎன்ஜிசி, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கடந்த ஓராண்டில் கணிசமான அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.அதாவது, பெரிய நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை, சந்தையில் மதிப்பு கூடியிருந்தாலும், சிறிய நிறுவனங்களின் பங்குமதிப்பு வீழ்ச்சி முதலீட்டாளர்களை கடும் இழப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிக லாபத்தைக் கருத்தில் கொள்பவர்கள், சிறிய நிறுவனங்களிலேயே அதிகம் முதலீடு செய்கின்றனர் என்பதால், சிறியநிறுவனங்களின் வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்பு, அதன்சந்தை மதிப்பிலும் தற்போது இழப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், நஷ்டமடையும் நிறுவனங்களில், அரசும் தனது முதலீடுகளை குறைத்துக் கொண்டு வருவதால், பங்குச் சந்தையில் அந்த நிறுவனங்களின் மதிப்பு மேலும் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடிப்படையில், மோடியின் இரண்டாவது அரசுஅமைந்த 60 நாட்களில் மட்டும் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறியநிறுவனங்களின் பங்கு மதிப்பு மேலும் குறைந்து வருவதால், இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் பங்குச்சந்தை வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.