காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்தும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பிரதேசத்தை பிரித்து இவற்றை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றியும் மோடி அரசாங்கம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரலாறு காணாத அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசூப் தாரிகாமி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மோடி அரசாங்கத்தின் இந்த அரசியல் அட்டூழியம் பல மோசமான விளைவுகளை உருவாக்கும். தேர்தலில் இந்துத்துவா கருத்துகளுக்கு பலமான ஆதரவு கிடைத்தது எனும் மதிப்பீடின் அடிப்படையில் மோடி அரசாங்கம் இந்த விஷப் பரீட்சையில் இறங்கியுள்ளது. தேசம் சந்திக்கும் கடுமையான நெருக்கடிகளான வேலை யின்மை, தொழில் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி ஆகியவற்றை தீர்க்க ஒரு துரும்பும் அசைக்க முன்வராத மோடி அரசாங்கம் காஷ்மீர் பிரச்சனையில் அரசியல் பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளதன் மூலம் இந்திய பன்முகத்தன்மை மற்றும் ஒன்றியத்தின் மீது ஒரு தாக்குதலை தொடுத்துள்ளது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதாரமாக வும், பலமாகவும் அமைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி சில மிகப்பெரிய சாதனைகளை, காஷ்மீரில் அன்றைய ஷேக் அப்துல்லா அரசாங்கம் அமல்படுத்தியது. அவை: சுமார் 4 இலட்சம் ஏக்கர் நிலம், நில உடமையாளர்களி டமிருந்து எவ்வித இழப்பீடுமின்றி பறிக்கப்பட்டு நிலமில்லாத ஏழைகளுக்கு அளிக்கப்பட்டது. குத்தகை விவசாயிகள் தாம் உழும் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவது சட்டவிரோதமாக ஆக்கப் பட்டது. ஒரு ஏழை தான் வாங்கிய கடனில் ஒன்றரை மடங்கு திருப்பி தந்திருந்தால் அக்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. வசதி படைத்த நில உடமையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்குள் இந்துக்கள் கணிச மாக வாழும் ஜம்மு பகுதிக்கும் பவுத்தர்கள் அதிகமாக வாழும் லடாக் பகுதிக்கும் சுயாட்சி உரிமை வழங்கப் பட்டது. இவை காஷ்மீர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. காஷ்மீர் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக் களும், குறிப்பாக அடித்தட்டு இந்துக்களும் பயன் பெற்றனர். எனினும் இச்சட்டங்களை எதிர்த்து சங்பரிவார அமைப்பான ஜம்மு பிரஜா பரிஷத் கலகத்தில் ஈடுபட்டது. ஜம்மு பிரஜா பரிஷத் “ஒரே தேசம் ஒரே சட்டம்” எனும் கோஷத்தை முன்வைத்து 370வது பிரிவை நீக்க வேண்டும் என கலகத்தில் ஈடுபட்டது. சுதந்திர இந்தியா வில் காஷ்மீர் வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே சங்பரி வாரம் 370வது பிரிவுக்கு எதிராக கலகம் செய்தும், கூப்பாடு போட்டும் வந்துள்ளது என்பது தெளிவு.
காஷ்மீருக்கு மட்டும்தான் விசேட சட்டமா?
காலப் போக்கில் 370வது பிரிவின் முக்கிய அம்சங்கள் அகற்றப்பட்டன. ஆரம்பத்தில் இருந்த 370வது பிரிவு இன்று இல்லை. பெரும்பான்மையான உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. எனவே 370வது பிரிவு கணிசமான அளவிற்கு நீர்த்து போய்விட்டது. மீதமுள்ளவற்றையும் நீக்க வேண்டும் என்பதே சங்பரிவாரத்தின் கோரிக்கையாக இருந்தது. அதுமட்டுமல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து தரப்பட்டு விட்டதாகவும் ஆர்எஸ்எஸ்- பாஜக தரப்பில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது போன்ற சலுகை வேறு சில மாநிலங்களுக்கும் தரப்பட்டுள்ளன. குறிப்பாக 371வது பிரிவின் கீழ் சில மாநிலங்களுக்கு விசேட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:
371- குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவிற்கு மட்டும் பொருந்தும்.
371A- நாகாலாந்திற்கு மட்டும் பொருந்தும்.
371B- அசாமிற்கு மட்டும் பொருந்தும்.
371C- மணிப்பூருக்கு மட்டும் பொருந்தும்.
371D மற்றும் E ஆந்திராவிற்கு மட்டும் பொருந்தும்.
371F – சிக்கிமிற்கு மட்டும் பொருந்தும்
371G- மிசோராமுக்கு மட்டும் பொருந்தும்.
371H- அருணாசலப் பிரதேசத்திற்கு மட்டும் பொருந்தும்.
371I- கோவாவிற்கு மட்டும் பொருந்தும்.
இப்பகுதி மக்களின் நன்மைக்கும் அவர்களது தனிப்பட்ட கலாச்சாரம் பாதுகாக்கப்படவும் இத்தகைய விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, காஷ்மீ ருக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது போல தவ றான பிரச்சாரம் செய்யப்படுவது உண்மை அல்ல.
காஷ்மீரில் பயங்கரவாதம் தோன்றக் காரணம் யார்?
காஷ்மீர் மக்களின் கலாச்சாரம் “காஷ்மீரியத்” எனப்படும் விசேட பண்பு கொண்டதாகும். காஷ்மீர் மக்கள் இசுலாமில் சுஃபி பிரிவை தமது வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டவர்கள். சுஃபி பிரிவு அனைத்து மதங்களையும் சமமாக பாவித்து அர வணைப்புத் தன்மையுடன் இயங்கும் குணம்கொண்டது. அதனால்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுவாக மதக்கலவரம் நடப்பது கிடையாது. 1947ல் தேசமே மதக்கலவரத்தில் பற்றி எரிந்தது. ஜம்மு பகுதியில் கூட மதக்கலவரங்கள் நடந்தன. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மதக்கலவரம் நடக்கவில்லை. 370வது பிரிவு நீர்த்துப் போனது என்பது காஷ்மீர் மக்களிடையே அதிருப்தியை தோற்றுவித்தது. தமது ‘காஷ்மீரியத்’ கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் எனக் கோரினர். இப்பிரச்சனையில் காஷ்மீர் மக்களின் மனங்களை வென்றெடுப்பது தேவையாக இருந்தது. ஆனால் தமது சுயநலனுக்காகவும் இந்திய அரசின் கண்மூடித்தனமான மேலாண்மையை காஷ்மீர் மீது திணிக்கவும் மத்திய அரசாங்கங்கள் ராணுவத் தீர்வை நாடின. இதன் விளைவாக காஷ்மீர் மண்ணில் பயங்கரவாதம் தலை தூக்கியது. வரலாற்றில் முதல் முறையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மதக்கலவரங்கள் தோன்றின. பல காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் உயிருக்கு பயந்து உடமைகளை இழந்து ஜம்முவில் அடைக்கலம் புகுந்தனர். சங்பரிவாரம் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திட தீவிர முயற்சிகளை செய்தது. மறுபுறத்தில் பாகிஸ்தான் இது தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக கருதியது. ஆப்கனில் இருந்து திரும்பிய தலிபான் பயங்கரவாதிகள் பலர் காஷ்மீருக்குள் அனுப்பப்பட்டனர். பயங்கரவாதத்தை ஒடுக்க இராணுவம் தனது நடவடிக்கைகளை அபரிமிதமாக அதிகரித்தது. இராணுவ நடவடிக்கைகள் குடிமக்களின் உரிமை மீறல்களுக்கு வித்திட்டது. எனினும் 2000க்கு பிறகு பயங்கரவாதம் மக்கள் ஆதரவை இழந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மோடியின் ஆட்சியில் காஷ்மீர் ஒரு பகடைக்காயாக!
காஷ்மீர் மக்களிடையே மனக்குமுறல்களும் அதிருப்தி மேகங்களும் அதிகமாகிக் கொண்டிருந்த பொழுதுதான் 2014ல் மோடி அரசாங்கம் அமைந்தது. காஷ்மீர் பிரச்சனையை தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ளும் வஞ்சகமான சூழ்ச்சியை மோடி அரசாங்கம் உருவாக்கி யது. ஜம்மு பகுதியில் வாழும் இந்து மக்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் ஜென்ம விரோதிகள் போல உணரும் வகையில் மோடி ஆட்சி பிளவை உருவாக்கியது. மோடி ஆட்சியில் ஊக்கம் அடைந்த சங்பரிவார த்தினர் மேலும் அழுத்தமாக 370வது பிரிவை நீக்க வேண்டும் என கூச்சல் போடத் துவங்கினர். காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்தன. அத்துமீறல்களும் ஆழமாகின. ராணுவத்தால் இளைஞர்கள் தாக்கப்படுவதும் அவமானப்படுவதும் நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக மாறியது. காஷ்மீரில் மட்டும் 10 இலட்சம் ராணுவத்தினர் உள்ளனர் எனில் நிலைமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
மோடி அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது. அவை என்ன ? காஷ்மீர் மக்களுக்கு வீடுகள் மறுக்கப்பட்ட அதே வேளையில் பண்டிட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான தனி வீடுகள் உருவாக்கப்பட்டன. ராணுவத்தினருக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கில் தனி வீடுகள். 370வது பிரிவு மீது தொடரும் தாக்குதல் ராணுவப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் எனும் கொடிய சட்டம் வெளி மாநிலங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுதல் சமூக ஊடகங்களில் காஷ்மீர் மக்களுக்கு எதிராக விஷம் கக்குதல் ஜம்மு - காஷ்மீரில் அமைதி உருவாக்கிட பாகிஸ்தானுடன் நடத்த வேண்டிய பேச்சு வார்த்தை சீர்குலைவு. இத்தகைய நிகழ்வுகள் காஷ்மீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
1990ல் நடந்த வன்முறையில் அயல்நாட்டு பயங்கரவாதிகளின் பங்கு இருந்தது. ஆனால் பின்னர் நடக்கும் எதிர்ப்பு இயக்கங்களிலும் வன்முறைகளிலும் காஷ்மீர் இளைஞர்களின் பங்குதான் அதிகமாக இருந்தது. தங்களது எதிர்காலம் பொய்த்துப் போனதா லும் தங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு உதாசீனப் படுத்தப்படுவதாலும் உண்டான கோபத்தின் காரணமாக வழிதவறும் இளைஞர்கள் பயங்கரவாதம் பக்கம் சாய்ந்தனர். மோடி அரசாங்கம் இவர்களை அரவணைத்துப் பேசி, திருத்துவதற்கு பதிலாக மேலும் பயங்கரவாதம் பக்கம் தள்ளிவிட்டது. இதனை தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல் பயன்படுத்திக் கொண்டது. காஷ்மீர் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி உட்பட பல ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. ஆனால் மோடி அரசாங்கத்துக்கு காஷ்மீர் பிரச்சனை யைத் தீர்க்கும் திட்டம் இல்லை. மாறாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை ஆழ மாக்க காஷ்மீரை பகடைக்காயாக பயன்படுத்துவதே மோடி அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.
தற்பொழுது 370வது பிரிவை நீக்கியதன் மூலம் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு புதிய, ஆபத்தான பரிணாமத்தை மோடி அரசாங்கம் உருவாக்கியுள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்த தவறான செயல் காஷ்மீரில் என்ன விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது என்பதை எவரும் கணிக்க இயலாது. எனினும் காஷ்மீரில் மட்டுமல்ல; இந்தியா முழுமைக்குமே இது அபாய மணி ஆகும். சங்பரிவாரத்தின் ‘‘ஒரே தேசம்; ஒரே கலாச்சாரம்; ஒரே சட்டம்” எனும் கருத்தாக்கத்திற்கு மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் அராஜகம் ஒரு முக்கிய அரசியல் மைல் கல். இந்திய ஒன்றியத்தில் பல தேசிய இனங்கள் உள்ளன; அவற்றுக்கு தனித்துவம் கொண்ட பண்பாடு கலாச்சாரம் மொழி ஆகியவை உள்ளன எனும் பன்முகத்தன்மையை வலுவாக மறுக்கும் செயல் இது! இது ஒரு ஆபத்தான அரசியல் பரிணாம போக்கு ஆகும். எனவே இதற்கு வலுவான எதிர்வினை உடனடி அவசியத் தேவை.