உத்தரகாண்டில் கடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது . இதைத்தொடர்ந்து மோடி அரசின் பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் எங்கே போனது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மோடி அரசு “பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 56 சதவிகிதம் நிதி திட்டத்திற்கான விளம்பரச் செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் கடந்த ஜனவரியில் வெளியானது.
இந்த திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 56.27 % (ரூ.364.66 கோடி) விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. 24.5 சதவீத (ரூ.159.18 கோடி) தொகை மட்டுமே மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளன.
2018-19-க்கான ஆண்டில் மத்திய அரசு இத்திட்டத்துக்காக ரூ.280 கோடியை ஒதுக்கியது. இதில் விளம்பரப் பணிகளுக்காக ரூ.155.71 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தரகாண்டின் 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துண்டா தாலுகாவில் உள்ள 27 கிராமங்களில் 51 குழந்தைகள், பாட்வாரி தாலுகாவில் உள்ள 27 கிராமங்களில் 49 குழந்தைகள், நவுகான் பகுதியில் 28 கிராமங்களில் 47 குழந்தைகள், மோரி பகுதியில் 20 கிராமங்களில் 24 குழந்தைகள், சின்யலிசார் பகுதியில் 16 கிராமங்களில் 23 குழந்தைகள், புரோலா பகுதியில் 14 கிராமங்களில் 17 குழந்தைகள் என பிறந்த 216 குழந்தைகளும் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் கல்பனா தாகூர், 3 மாதங்களாக 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்பது எதார்த்தமானது இல்லை. கருக்கலைப்பு அல்லது பெண் சிசுக்கொலை நடந்து வருவதை இந்த புள்ளி விவரம் தெளிவாக காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.