சிறப்பிதழ்
புதுச்சேரியில் தமுஎகச அளித்த வரவேற்பின் போது, ஒரு மூதாட்டி வந்து உட்கார்ந்து கொண்டு நாம் பேசுவதைக் கவனித்துக் கொண்டே இருந்தார். பிறகு என்னிடம் தன்னுடைய சொந்தக் கதையை சொல்ல ஆரம்பித்தார். அவர் கணவர் குடியால் இறந்தது பற்றி எல்லாம் குறிப்பிட்டார். மைக்கில் பேசுவீர்களா என்று கேட்டபோது உடனே ஒத்துக்கொண்டார். அவற்றில் சில விஷயங்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தன. கணவர் குடித்தே இறந்துவிட்டார். மகன் குடி நோயாளியாக தெருவில் உருண்டு கொண்டே இருக்கிறான். 85 வயதாகிறது. வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு டாஸ்மாக் கடையை கடந்து தான் போகவேண்டும். ஒருமுறை அப்படி போனபோது, குடித்துவிட்டு அதில் இருந்தவர்கள் இந்த 85 வயது மூதாட்டியை பார்த்து, நல்ல பிகரா இருக்கியே, கூப்பிட்டா வருவியா என்று கேட்டார்களாம். அங்கிருந்த ஒரு போலீஸ்காரரிடம் சொன்னால் எந்த ரியாக்சனும் இல்லையாம். ஒருபுறம் அழுதுகொண்டே சொன்னாலும் மறுபுறம் இவர்களை எல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும் என்று பொரிந்து தள்ளினார். கடைசியாக சாராயக்கடை வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்று முழங்கினார். கூட்டம் அப்படியே உறைந்து நின்றது...
- உ.வாசுகி
நடைபயணம் மேற்கொள்வது என்று முடிவெடுத்தபோது பெண்களால் வீட்டை விட்டு பத்து நாட்கள் வர முடியுமா? வீட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும் சமாளித்து கொண்டு பிரச்சாரத்தில் அவர்களால் பங்கேற்க முடியுமா? பெண்களின் உடல் அதற்கு ஒத்துழைக்குமா? என பல்வேறு சந்தேகங்களுடன் இந்த நடைபயணத்தை துவக்கினோம். வெளியில் இருக்கக்கூடிய சகோதர அமைப்புகளை சேர்ந்தவர்கள், நண்பர்கள் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் என்று பலரும் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்களால் நடக்க முடியுமா? எவ்வளவு தூரம் நடக்க போகிறார்கள்? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பினர். சிலர் பெண்களால் அவ்வளவு தூரம் நடப்பது சிரமம் என்றும் கூறினார்கள். ஆனாலும் உறுதியோடு தொடர்கிறோம்.
- எஸ்.வாலண்டினா
எங்கள் நடைபயணக்குழுவில் பி.காம். முதலாமாண்டு படிக்கும் இளம் பெண் ஒருவர் தொடர்ந்து 6-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறாள். தஞ்சை மாவட்டத்தை சார்ந்த அவள் வீடு காட்டுப் பகுதியில் தனியாக உள்ளது. ஒருநாள் மாலைப் பொழுதில் ஒரு கயவன் அவளது அக்காவை பாலியல் வல்லுறவு செய்ய வந்துள்ளான். அவனை விறகுக்கட்டையால் அடித்து விரட்டியுள்ளாள். மோதலில் இருவரும் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர். அடுத்தநாள் காவல்துறை இந்த இரு இளம் பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது. ஜனநாயக மாதர் சங்கத்தின் உதவியோடு வழக்கை எதிர் கொள்ளும் இவள் எங்கள் பயணத்தில். இரவு எந்நேரம் பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருப்பாள். இது செமஸ்டர் காலமென்பதால் இரவு எந்நேரம் பயணம் முடிந்தாலும் படித்து முடித்துவிட்டு தூங்குகிறாள். எந்நேரம் தூங்கப் போகிறாள், எந்நேரம் எழுந்து கிளம்புகிறாள் என்றே தெரிவதில்லை.
- பி.சுகந்தி