மாக்சிம் கார்க்கியின் வரலாற்றைக் கதையாக எழுத இளவேனில் முன் வந்திருக்கிறார். இதற்கு என்ன காரணம்? அவரிடமே கேட்டறியலாம். கார்க்கியின் வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதத் திட்டமிட்டு முதல் பகுதியை எழுதி முடித்திருக்கிறேன். அதன் வெளியீட்டுவிழா செப்டம்பர் எட்டாம் தேதி நடக்கிறது. அந்த நூலுக்கான முன்னுரையை இப்படித் தொடங்கியிருக்கிறேன். “ ‘எப்போது ’ விடியும்” ? யாருக்குத் தெரியும் ? விடியலாம்.. விடியாமலும் போகலாம். சிறைச்சாலையின் ஒவ்வொரு அறையிலும் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. கைதிகளின் கொட்டடிகளுக்கு வெளியே உயரமான கம்பத்தின் உச்சியில் விளக்கொன்று எரிந்துகொண்டிருக்கிறது. அது கைதிகளை வேவு பார்ப்பது போல் ஒவ்வொரு அறையின் இடுக்கிலும் ஒளியாய்க் கொஞ்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாறைகளைப் பிளந்து கொண்டு முளைத்துக் கிளம்பும் செடிகளைப்போல் எத்தனைக் காவல் போட்டாலும் அவற்றை மீறித் திமிரி எழும் மனிதர்கள் இங்கேயும் இருக்கிறார்கள். இவர்கள் ‘ராஜ துரோகிகள் ’ என்கிற முத்திரை குத்தப்பட்டவர்கள். இவர்கள் இம்மாதிரியான இரவு நேரத்திற்காகவே காத்திருப்பார்கள்.
இதோ இந்தக் கைதியின் பெயர் முல்க்ராஜ் ஆனந்த். நீங்கள் நினைப்பது சரிதான் . புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த்தான்! இவர் ஏன் கைதியாக சிறை கொட்டடிக்கு வந்திருக்கிறார் ? பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சில புத்தகங்களை இவர் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறார் யாரோ சிலர் ‘ராஜ விசுவாசிகள்’ காட்டிக்கொடுத்துவிட்டார்கள். இப்போது கைதியாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஒரு மூலையில் மூடி இல்லாத தகரப் பெட்டி ஒன்று குப்புறக் கிடக்கிறது. அதன் மீது ஒரு மண் சட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனது அறைக் கைதிகள் உறங்கி விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு ஆனந்த் மூத்திரச்சட்டி இருக்கும் மூலைக்கு ஊர்ந்து சென்றார். தகரப் பெட்டிக்குக் கீழே கையை நுழைத்தார். மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்த்துவிட்டுக் கையை வெளியே எடுத்தார். ஊர்ந்தவாறு தமது இடத்துக்கு வந்து கதவோரமாகப் படுத்துக் கொண்டார் .
அவர் கையிலே ஒரு புத்தகம். மார்க்சிம் கார்க்கி எழுதிய ' தாய் ' என்னும் புதினம் . இப்படிப்பட்ட கார்க்கியைப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் அத்தனை பேரும்கொண்டாடினார்கள். ஆனால் கார்க்கி எங்கேயும் தனது ‘மேதாவிலாசத்தை’ வெளிப்படுத்தியதில்லை. அவருடைய சுயசரிதை என்று எதுவும் எழுதப்படவில்லை . எனது குழந்தைப் பருவம் , நான் பெற்ற பயிற்சிகள், நான் பயின்ற பல்கலைக்கழகங்கள் ஆகிய மூன்று நூல்கள் அவரைப் பற்றி கொஞ்சம் பேசுகின்றன . இந்த மூன்று நூல்களிலும் மக்களிடமிருந்து தான் கற்றுக்கொண்ட விவரங்களை அவர் அள்ளித் தருகிறார். கார்க்கியின் படைப்புகளில் பலகாலம் பழகியவன் என்கிற முறையில், அவரை நான் மூன்று கோணங்களில் எழுதத் துணிந்தேன். கார்க்கியும் குழந்தைப்பருவமும், கார்க்கியும் இலக்கியமும், கார்க்கியும் அரசியலும் இவ்வாறு மூன்று தொகுப்புகள். முதல் தொகுப்பே பல ஆயிரம் பக்கங்களில் நீளும் என்பதால், ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் இடையேயான இனிய கதையாகக் குறுக்கினேன். அதுதான் முதல் தொகுதியாக வெளிவருகிறது.
கார்க்கி பற்றிய உங்களின் மதிப்பீடு ... கார்க்கி என்றால் ரஷ்ய மொழியில் கசப்பு, துயரம் என்று பொருள் . அவருடைய வாழ்க்கை அப்படித்தான் இருந்தது . ஆனால் இதுவல்ல வாழ்க்கை. வாழ்க்கை இனியது. இன்றிருப்பதைவிட மனிதன் மேலும் அழகு பெற்றுத் திகழ்வான். கசப்பிலிருந்தும் துயரத்திலிருந்தும் மானுடம் விடுபடும். அதன் சங்கிலிகள் நொறுங்கும். அதுவரை நான் ஓயமாட்டேன். இதுதான் இந்த எளிய மனிதரின் மறுபக்கம் . அவர் உண்மையைப் போல் எளிமையாக இருந்தார். ஊழித் தீயைப் போல் வலிமையாகவும் இருந்தார். இந்த உலகத்தையே அணைத்துக் கொள்ளும் அளவுக்கு அவருடைய இதயம் விசாலமாகவும், அன்பைப் பொழிவதாகவும் இருந்தது. ஆனால் சூதும் சூழ்ச்சியும் உலகின் பேரெழிலைக் கசக்கிப் போடும்போது அறச்சீற்றம் அவருள் பொங்கி எழுந்தது. மனிதாபிமானம், போர்க்குணம்; இரண்டின் வார்ப்பாக அவர் சுடர்ந்தார். பனிப்பொழிவும், எரிமலையும், தாயின் பரிவும், போர்வீரனின் கோபாவேசமும் இந்தத் தனித்த அடையாளம் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது . கார்க்கி சொல்கிறார்: ஒத்துப் போவதற்காக அல்ல; யுத்தம் புரிவதற்காகவே இந்த உலகத்திற்கு நான் வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட சிந்தனையைக் கொண்ட கார்க்கியின் வரலாறு கதையாக வருவது காலத்தின் தேவையாகவே கருதுகிறேன்.