tamilnadu

img

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த மாணவரின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும். ஏழை மற்றும் வசதிபடைத்த மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகும். மேலும் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போதுள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். அதேசமயம் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் உள்ளதா என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஜூலை 15-ம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு,  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிமன்றம் வரும்  20 -ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.