பாலியல் கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை வழக்கை தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் ஏதேனும் ஒன்றிற்கு மாற்ற வேண்டும் என்றும், தங்கள் குடும்பத்தினரையும் தில்லிக்கு மாற்றி, வேலை மற்றும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் கோரினார்.
வெள்ளியன்று சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் செய்தியாளர்களிடையே அவர் கூறியதாவது: “நாங்கள் இந்த வழக்கு தில்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். அதேபோன்று எங்களுக்குத் தில்லியில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். அரசாங்கம் இதற்கு உதவி செய்யுமானால் நல்லது.”
அக்குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு மற்றும் அக்குடும்பத்தின் தினசரித் தேவைகளைக் கவனித்து வரும் உட்கோட்ட நடுவர் (கோட்டாட்சியர்), திருமதி அஞ்சலி கேங்வார், இது தொடர்பாகக் கூறுகையில், தான் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தையைச் சந்தித்ததாகவும், அவர்களுடைய குடும்பத்திற்குத் தேவையான ரேஷன்பொருள்களையும், கால்நடைகளுக்குத் தீவனமும் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர், அக்குடும்பத்தார் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயல்பு வாழ்க்கையைத் தொடங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் குழு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான லவ குசாவை அவரது இல்லத்தில் விசாரித்திருக்கிறது. அவரிடமிருந்து ரத்தக்கறை படிந்த துணிகளைக் கைப்பற்றியிருக்கிறது. வியாழன் அன்று குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற மூவரின் இல்லங்களுக்கும் சென்றிருக்கிறது.
மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வு, கொலை
இந்தச் சம்பவத்தின் விசாரணை நடந்துகொண்டிருக்கையிலேயே, உத்தரப்பிரதேச மாநிலம், பரபாங்கி மாவட்டத்தில் சத்ரிக் என்னுமிடத்தில் புதன் அன்று தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்வுணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் வெளிவந்திருக்கிறது. இதனைத் தெரிவித்தக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ராம் சேவக் கவுதம், வன்புணர்வில் ஈடுபட்டது சம்பந்தமாக ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவன் பெயர் தினேஷ் கவுதம் (வயது 19) என்றும் தெரிவித்தார். அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
(ந.நி.)