tamilnadu

img

குருமூர்த்தி கருத்து - மக்காத குப்பை - த.பூங்குழலி

ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற வலதுசாரிகள் வணங்குவதாக கூறும் பெண்மை எத்தகையது?


உலகம் முழுவதும் பெண்மைக்கு ஒரு இலக்கணம் எனில், வலதுசாரி ஆதரவாளர்கள் போர்வையில் வலம் வரும் சங்கப் பரிவாரங்களுக்கோ வில்லங்கத்தின் உச்சமாக, ஒரு பிரத்தியேக பெண்மைக்கான இலக்கணம் உள்ளது. அவர்களின் இலக்கணப்படி பெண் என்பவள் அச்சம், மடம், நாணம் போன்ற குணாதிசயங்கள் நிறைந்த ஒரு போகப் பொருள். அச்சம், மடமை மற்றும் நாணத்தை உள்ளடக்கிய கற்பை பெண்மைக்கு அடிப்படை தகுதியாக வேதத்தின் துணை கொண்டும் கட்டமைக்கின்றனர். அவர்களின் கூற்றுப்படி கண்ணுக்கு புலப்படாத, பெண்ணுக்கு மட்டுமே உரித்தாக்கப்படும் இந்த கற்புக்கு அடிப்படை தகுதிகள் பல, அதில் முக்கியமான சில பின் வருபவைகள். திருமணத்திற்கு முன் தந்தை மற்றும் சகோதரனின் பாதுகாப்பில், வீட்டுக்குள் பயந்து அடங்கி இருப்பது. திருமணத்திற்கு பின் கணவன் என்ற ஆணுக்கு அடிமை யாய் பலனை எதிர்பாராமல் தொண்டூழியம் செய்து கொண்டு வீட்டுக்குள் சிறைப்பட்டு இருப்பது.

தன் கணவன் வேறு பெண்களோடு தவறான உறவில் இருந்தாலும், அந்த தவறைத் தட்டிக் கேட்கக் கூடாது.  மாறாக அவரின் மனம் நோகாமல், அவரின் தேவை களைப் புரிந்துணர்ந்து சேவைகள் செய்து சிறந்த மனைவி என்ற தகுதியை பெறுவது. முள்ளின் மீது சேலை விழுந்தாலோ, அல்லது சேலையின் மீது முள் விழுந்தாலோ, சேலைக்கு தான் பாதிப்பு. அந்த உயிரற்ற சேலைப் போன்றவள் பெண் என்பதை உணர்ந்து, மடமையின் முழு உருவாய், அச்சத்தோடு நான்கு சுவர்களுக்குள் பாதுகாப்பாய் வாழ்வது. சேலையை கிழிக்கும் முள்ளை அகற்றினால் சேலைகள்  பாதுகாக்கப்படுமே என்ற அடிப்படை கேள்வியை கூட எழுப்பாமல் இருப்பது. ஒரு ஆண், விருப்பமில்லாத பெண் மீது பாலியல் குற்றத்தை சுமத்தினாலும் பாதிக்கப்பட்ட பெண்ணே கற்பழிந்து போவாள் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஆகையால் பெண் என்பவள் எளிதில் அழிந்து போகக் கூடிய கரிக்கோல் எழுத்தை ஒத்த தன் கற்பைக் காத்துக் கொள்ள மிகுந்த பாதுகாப்பாய் இருக்க வேண்டும். தவறு நடந்தால் கூட வெளியே சொல்லாமல் தன்னுள் புதைத்து கொண்டு வாழ வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் அதை எதிர்த்து குரல் எழுப்பா மல் இருப்பது. மாறாக அந்த பெண்ணின் உடையையும், அவர்கள் வெளியே சென்ற நேரத்தையும் குற்றத்திற்கு காரணமாக புனைவது, குழந்தைகள் பாதிக்கப்பட்டால், குற்றத்திற்கு விதியின் மீது பழியை கூறுவது. 

பணி இடங்களில் பெண் என்ற காரணத்தால் மறுக்கப் படும் ஊதிய சமத்துவத்தை கேட்கக் கூடாது.சமுதாயத்தில் எண்ணிக்கை அடிப்படையில் சரி பாதியாக இருக்கும் பெண்கள், அரசியலில் சரி பாதி இல்லை , குறைந்தபட்சம் 33 சதவிகிதம் கூட கேட்காமல் இருக்கவேண்டும். மனு தர்மம் முதல் ராமாயணம் வரை அவர்கள் மேன்மையாக காண்பிக்கும் வேத நூல்கள் அனைத்தும், பெண்கள் ஆண்களை மயக்கும் போகப் பொருள் என்று கூறினாலும், பெண்களை மடமையின் உருவாக சித்தரித்தா லும், பெண்கள் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று அவர்கள் பிறப்பை இழிவுபடுத்தினாலும், அவர்கள் ஆண்களை விட அறிவில் குறைந்தவர்கள் என்று இழித்து கூறினாலும், அக்கருத்துக்களை  எதிர்த்து கேள்விகள் கேட்காமல் ஆமோதித்து அடங்கி வாழ்வது. புராணக்கதைகள் பல கூறி பெண்ணின் இயற்கை உடல் சார்ந்த நிகழ்வான மாதவிடாயை தீட்டு என்று இழிவாகக் கூறி, சமூக நிகழ்விலிருந்து ஒதுக்கி வைப்பதை யும், புனிதம் என்று அவர்கள் கூறும் கடவுள் வழிபாட்டி லிருந்து ஒதுக்கி வைப்பதையும், ஏற்றுக் கொண்டு அறிவியல் அடிப்படையில் இந்த ஒதுக்குதலை எதிர்த்து கேள்வி கேட்காமல் வாழ்வது.

பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் கடமையுடன், பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு கூறினாலும், அந்த தீர்ப்பை அறிவுசார்ந்து சிந்திக்காமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், ஒரு பெண் உள்ளே சென்றமையால், கோவிலின் புனிதம் கெட்டு விட்டது என்று அங்கிருக்கும் பூசாரிகள், கோவிலை கழுவி சுத்தம் செய்ததை பார்த்தும் கோபம் கொள்ளாமல், கேள்விகள் ஏதும் கேட்காமல் இருப்பது. முடிந்தால் அந்த பூசாரி செய்தது நியாயம் என்று பேசிக் கொண்டு வாழ்வது. அச்சம், மடம்,நாணம் மற்றும் கற்பு  பெண்ணுக்கு மட்டும் தானா என்று  கேட்காமல் இருப்பது. திருமண அடை யாளங்கள் ஏன் ஆணுக்கில்லை என்று கேட்காமல் இருப்பது. பெரியாரின் புத்தகத்தை கண்ணால் கூட பார்க்கக் கூடாது. பொது உடைமைக் கருத்துக்களை எள்ளளவும் எண்ணிக் கூடப் பார்க்கக் கூடாது. பெண் சுதந்திரம் பற்றிப் பேசும் பெண்களை இழிவாக பேச வேண்டும். தங்கள் மீது எவ்வளவு வன்முறை நிகழ்ந்தாலும், வேதங்களின் பயனால் பாதுகாப்பாக இருப்பதாக பொய் சொல்லிக் கொண்டு வாழ்வது. இப்படியான இலக்கணத்தோடு ஒரு பெண் இந்த தரணியில் வாழ்ந்தால், மேதைமைப் பொருந்திய ஐயா குருமூர்த்தி பார்வையில் அந்த பெண்,  வணங்க தகுதியான பெண்மை மிகுந்த பெண் ஆகிறாள்.ஆரிய வேதத்தின் அடிப்படையில் இயங்கும் இத்தகு வலதுசாரி மேதைகள், மக்களை அடி ஆட்களாகவும், பலனை எதிர்பாரா மல் தொண்டூழியம் செய்யும் அடிமைகளாகவும் சாதியின், மதத்தின், பாலினத்தின் பெயரால் மாற்றிவிட்டு, அவர்களை எளிதில் அதிகாரம் செய்து கொண்டு, தங்கள் பிழைகளை மறைத்து வாழ்பவர்கள். இந்த மதவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தை களுக்கும் கூட பாதுகாப்பில்லை என்பது தான் உண்மை. “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை” என்பார் களே, அது போல இத்தகைய பிரிவினைவாதிகள், பெண் களை இழிவாக பேசுவதற்கான காரணத்தை, மேலும் விளக்க அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

இந்த வலதுசாரி மேதைகளின் பெண்மை சார்ந்த, சமூகம் சார்ந்த பார்வையை கூர்ந்து பார்க்கும் போது, நம் எல்லோர் மனதிலும் எழும் ஒற்றைக் கேள்வி  ,மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் இது போல் இன்னும் எவ்வளவு அருவருப்பான, சமூக நீதியற்ற கருத்துக்களை இவர்கள் பொது சபையில் பேசுவார்களோ. என்பது மட்டுமே. இத்தகைய விஷக் கருத்துகளுக்கு கட்சி பேதமின்றி அனைத்து சாராரும்  எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே, இது போன்ற தவறான மனிதர்கள் தங்களின் இழிவான கருத்து குப்பைகளை சமூகத்தின் மீது கொட்ட மாட்டார்கள். குருமூர்த்தி போன்ற வலதுசாரி மகான்களின் கூற்றுப்படி, 30 சதவிகித பெண்கள் மட்டுமே தங்கள் மீது சுமத்தப்பட்ட புனிதம் எனும் மாய வலையில் சிக்கி, தங்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல், அடிமைகளாக வாழ்கின்றனர். அத்தகையப் பெண்களால் இந்த சமுதாயத்திற்கு எந்த பயனும் இருக்காது. அந்த 30 சதவிகித பெண்களை அத்தகு அடிமை சிறையிலிருந்து மீட்டு, அவர் களையும் சமுதாய மனிதர்களாக்கி, வீரமிகு மங்கையராய் மாற்றும் கடமை பெண்ணியவாதிகள் அனைவர்க்கும் உள்ளது. பெண்ணிய செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, சங்க பரிவாரங்களுடைய பிடியிலிருந்து அனைத்து பெண்களையும் மீட்போம்.

கட்டுரையாளர்: அமெரிக்காவில் பணிபுரியும் கணினி பொறியாளர்