மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதத்திற்கு 300 ரூபாய் ஓய்வூதியத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு பயன் திட்டமான ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், கடந்த நான்காண்டுகளில் அளிக்கப்பட்ட ஓய்வூதியம் மாநில வாரியாக எவ்வளவு என்றும், வருங்காலத்தில் ஓய்வூதியத்தை உயர்த்தும் முன்மொழிவுகள் ஏதேனும் அரசிடம் உள்ளதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியதாவது:
“தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme), இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் (IGNDPS) ஆகியவற்றின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள, குடும்பங்களில் உள்ள 18 முதல் 79 வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, நபர் ஒருவருக்கு, மாதம் ஒன்றுக்கு 300/- ரூபாய் வீதம் மாதாந்திர ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இந்தப் பயனாளிகள் 80 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினை அடையும் போது அவர்களுக்கு ஓய்வூதியமானது மாதம் ஒன்றுக்கு 500/- ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
ஓய்வூதியத்தை உயர்த்தும் முன்மொழிவு எதுவும் தற்போதில்லை. இருப்பினும், தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் வரக்கூடிய ஒன்றிய உதவிக்கு மேல் அதிகமாக வழங்குவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு, ஓய்வூதியத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு, ஒரு மாதத்திற்கு 100/- ரூபாயிலிருந்து 3300/- ரூபாய் வரை தொகை வழங்கப்படும் அளவு உள்ளது.”
இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
(ந.நி.)