புதுதில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவிகளுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவிப் பணம், மற்றும் சலுகைகளை அளித்து, அவர்களின் கல்வி உரிமையைக் காப்பாற்றி, அவர்கள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தடுத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தில்லி மாநிலக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
புதுதில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஏ-கணிதம் படித்துவந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மைமூனா முல்ல மற்றும் பொதுச் செயலாளர் ஆஷா ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பல்லாயிரக்கணக்கனக்கான கனவுகளை நெஞ்சில் ஏந்தி தலைநகருக்குப் படிக்க வந்த இளம் மாணவி, ஐஸ்வர்யா ரெட்டி, புதுதில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஏ-கணிதம் (ஹானர்ஸ்) படித்து வந்தவர், நவம்பர் 3 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அறிந்து திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தோம்.தெலங்கானா ராங்காரெட்டி மாவட்டத்திலிருந்து வந்துள்ள அய்ஸ்வர்யா ரெட்டி, +2 தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். தொழிலாளர் வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஏழை மாணவியான அவர், உயர் கல்வி கற்பிப்பது மிகுந்த சிரமமான ஒன்றாகவே இருந்தது. எனினும் அவர்தம் குடும்பத்தினர் தங்கள் பூர்வீக வீட்டை அடகு வைத்து, தன் மகளைத் தில்லிக்கு உயர்கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்தனர். அவர் தான் ஓர் ஐ.ஏ.எஸ். அலுவலராக வேண்டும் என்ற கனவை நெஞ்சில் ஏந்தி இருந்தார். அவருக்கு, அவருடைய திறமை மற்றும் அதிக மதிப்பெண் பெற்றிருந்த அடிப்படையில் அவருக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சத்தின் ‘இன்ஸ்பைர்’ கல்வி உதவித்தொகை (INSPIRE scholarship) பெறத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனாலும் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அதன் மூலம் கிடைக்கவேண்டிய பணப்பயன் எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை. மார்ச் 20இலிருந்து அது நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு நிர்வாகத்தரப்பில் சமூக முடக்கம் காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதே சமயத்தில் மாணவர்கள் கல்லூரிக்குக் கட்ட வேண்டிய கட்டணங்கள் மற்றும் தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான உணவுக்கட்டணம் (mess bills) போன்றவற்றில் தளர்வேதும் செய்யப்படவில்லை. ஐஸ்வர்யா ரெட்டி நிலை குறித்து லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவர் சங்கம் திரும்பத்திரும்ப நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்துச்சென்றிருக்கிறது. ஆனாலும் அவர்கள் எதுவும் கூறாது மவுனம் கடைப்பிடித்திருக்கிறார்கள். இதேபோன்றுதான் ரோகித் வெமுலாவிற்கு தரப்பட வேண்டிய கல்லூரி உதவிப் பணம் கொடுக்கப்படாது அவர் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கத்தள்ளப்பட்டார். இப்போது அதேபோன்ற நிலைக்கு ஐஸ்வர்யா ரெட்டியும் தள்ளப்பட்டிருக்கிறார். இவர்கள் போன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் – ஏழைகள் – உயர்கல்வி பயில வந்துவிட்டு, அரசாங்கத்திடமிருந்து கல்வி உதவிப் பணம் வராது தங்கள் படிப்பையும் வாழ்வையுரம் தொடர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அரசாங்கமோ, கல்லூரி நிர்வாகமோ அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. மாறாக, மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவிக் கட்டணங்களைக் காலத்தே செலுத்தாமலும், அவர்கள் கல்லூரிகளுக்குக் கட்ட வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியும், உணவு உண்டு வந்த உணவுக்கூடங்களை (mess) மூடியும், எல்லாவற்றிற்கும் மேலாக, நாடு முழுதும் தங்களுடைய புதிய தேசியக் கல்விக் கொள்கையால் அவர்களை அறைந்து கொண்டும் இருக்கின்றன. பெண்கள் கல்லூரிக்கு வந்து உயர்கல்வி பயில்வது என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் மிகவும் சிரமம். ஐஸ்வர்யா சிரமங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு, புதுதில்லி வந்து ஆயிரக்கணக்கான கனவுகளுடன் படிப்பைத் தொடர்ந்தார். எனினும் அவர் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் கொல்லப்பட்டுவிட்டார். 2020 புதிய கல்விக் கொள்கையானது, பணம் இல்லாதவர்கள், கல்வியைத் தொடர உரிமையற்றவர்கள் என்று கூறுகிறது.
மத்திய பாஜக அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கும், குடிமக்களுக்கும் தன்னுடைய செயல்கள் மூலமாக கிரிமினல்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. அரசமைப்புச்சட்டத்தின் கீழான நீதி மற்றும் சமத்துவக் கொள்கை அனைத்தையும் அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் காலில்போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டியது முக்கியமாகும். தில்லி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், இளம் மாணவி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறது. அம்மாணவிக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் என்று கோருகிறது. அவருக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவிப்பணத்தை முழுமையாக அவர்தம் குடும்பத்தினருக்கு அளித்திட வேண்டும். அரசாங்கத்திடமிருந்து மேலும் கூடுதலாக இழப்பீட்டுத் தொகையும் பெற்று அளித்திட வேண்டும். இதேபோன்று இதர மாணவர்களின் கல்வி உதவிப்பணங்களையும் உடனடியாக அவர்களின் கணக்கில் சேர்ப்பித்திட வேண்டும். கல்லூரியில் சேர்ந்துள்ள எந்த மாணவரையும் கொரோனா வைரஸ் தொற்றால் சிரமத்திற்கு ஆளாகியிருக்கக்கூடிய நிலையில் தங்கள் படிப்பையும், வாழ்க்கையையும் தொடர்வதற்கு சிரமங்களை ஏற்படுத்தாது இருப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
(ந.நி