tamilnadu

வெளிநாட்டு முதலீடு சரிவு மோடி அரசின் தம்பட்டம் பொய்யாகிறது

புதுதில்லி,மே 29- இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு ஆறு ஆண்டுகளில் முதல் முறையாகச் சரிவைச் சந்தித்துள்ளது.இதுதொடர்பாக தொழில் துறை மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் 1 சதவீதம் குறைந்து 44.37 பில்லியன் டாலராக மட்டுமே இருந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் ஏற்படும் மிகப் பெரிய சரிவாகும். 2017-18 ஆம் நிதியாண்டில்கூட இந்தியா 44.85 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்திருந்தது. கடைசியாக 2012-13 ஆம் நிதியாண்டில் அந்நிய முதலீட்டில் 36 சதவீதம் சரிவு ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் இப்போதுதான் அந்நிய முதலீட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.தொலைத் தொடர்புத்துறை, கட்டுமானம் மற்றும் மருந்துத் துறைகள் அதிகமான முதலீடுகளை ஈர்க்கத் தவறியுள்ளன. தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 6.21 பில்லியன் டாலரிலிருந்து 2.67 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையில் 213 மில்லியன் டாலரும், மருந்துத் துறையில் 266 மில்லியன் டாலரும், மின்சாரத் துறையில் 1.1 பில்லியன் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், சேவைகள் துறை, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை, வர்த்தகத் துறை, ஆடோமொபைல் ஆகிய துறைகளில் அதிக முதலீடுகள் குவிந்துள்ளன.இந்தியாவில் அதிக முதலீடு செய்த நாடாக மொரீஷியஸ் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து 16.22 பில்லியன் டாலரும், மொரீஷியஸ் நாட்டிலிருந்து 8 பில்லியன் டாலரும் கிடைத்துள்ளது.அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் இந்தியத் தொழில்களை கபளீகரம் செய்வதுதான் மோடிஅரசின் திட்டம். ஆனால் இதற்கு சீர்திருத்தம் என்று பெயரிட்டு, நிதி ஆயோக் தீவிரமாக அமலாக்க முயற்சிக்கிறது. ஆனாலும் கூட இந்த வழியிலும் முதலீடு என்ற பெயரில் பெரிய அளவிற்கு எதுவும் வந்து சேராதது, மோடி அரசின் தம்பட்டத்தை பொய்யாக்கி வருகிறது.