மார்க்சியத்திற்கு பெரியார் செய்த தொண்டு - 1
தமிழகம் கண்ட மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர், சுய மரியாதை இயக்கத்தை இந்தியாவில் முதன்முதலில் துவக்கிய அறிஞர் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மாபெரும் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் போன்ற பெருமைக்குரிய ஈவெரா பெரியார் அவர்கள் 1931 ஆம் ஆண்டில் மேல் நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசியல் இயக்கங்கள், அரசியல், பொருளாதார, சமூக அமைப்பு போன்றவற்றை நேரில் கண்டு வரவேண்டுமென்று விரும்பினார். இதன் பொருட்டு வழக்கறிஞரும் தனது நெருங்கிய நண்பருமான எஸ்.ராமநாதன் துணையுடன் பெரியார் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி சென்னையிலிருந்து கப்பலில் புறப்பட்டுச் சென்றார். எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் மற்றும் இங்கிலாந்திற்கு சென்று சுமார் 11 மாத காலம் சுற்றுப்பயணம் சென்றார். இந்நாடுகளில் இருந்த பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடினார். தொழிலாளர் தலைவர்கள் பலருடன் விவாதம் நடத்தினார். அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார நிலைமை, மக்களின் வாழ்க்கை நிலைமை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் பொழுது ஒரு சில தொழிலாளர் கூட்டங்களிலும் அவர் பேசினார்.
இந்த நாடுகளைச் சுற்றிப்பார்த்த பின் பெரியாருக்கு சோவியத் நாட்டைக் காண வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. அங்கே சோசலிச முறை எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை நேரில் காண அவருக்கு பெரும் விருப்பம் இருந்தது. எனவே, அவர் இந்திய வம்சாவளியினரும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்த சாபூர் சக்லத்வாலாவைச் சந்தித்துப் பேசி தன் விருப்பத்தை தெரிவித்தார். அவரும் சோவியத் நாட்டிற்குச் சிபாரிசு கடிதம் கொடுத்தார். அதைக் கொண்டு பெரியாரும், எஸ்.ராமநாதனும் சோவியத் நாட்டிற்குச் சென்றனர். சோவியத் நாட்டில் அவர் கண்ட காட்சிகள் அவரைப் பெரிதும் ஈர்த்தன. கடவுள் பயமின்றி அந்நாட்டு மக்கள் வாழ்ந்தது, கல்வி வசதி, மருத்துவ வசதி, உயர்ந்த கலாச்சார வாழ்க்கை, முதலாளி, நிலப்பிரபு என்பதே இல்லாமல் அனைவரும் வேலை செய்து நல்வாழ்வு வாழ்ந்தது, குழந்தைகள் மிகுந்த ஆரோக்கியமானவர்களாக இருந்தது, ஒவ்வொரு உழைப்பாளிக்கும் ஓய்வுகால வசதிகள், ஆண்-பெண் சமத்துவம், பகுத்தறிவுப்பூர்வமான வாழ்க்கை, மூட நம்பிக்கை சிறிதும் இல்லாதது போன்றவை அவர் மீது பெரும் தாக்கம் செலுத்தியது, இவை அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் சோசலிச சமுதாயத்தின் சாதனை என்று பெரியார் உணர்ந்தார்.
லண்டன் மெக்ஸ்பரோ லேக் பூங்காவில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் பெரியார் பேசியது (நாள் 20-06-1932)
“இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தக்க சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
‘இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8அணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகி றது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினமும் 5 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?
அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் இந்தியாவா னது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளி மார்களும், அய்ரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும், குடித்தனக்காரர்களுக்குப் பாத்தியமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள்.
‘ஆதலால் யார்க் ஷயர்’ தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும், சமத்து வத்திற்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளரின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டி ருங்கள்!
அந்நாட்டின் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், விவசாயப் பண்ணைகள், குடியிருப்புகள், அனைத்தையும் அவர் பார்வையிட்டார். அவர்கள் சென்ற அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சோவியத் நாட்டின் அரசாங்க விருந்தினர்களாக பெரியாரும், ராமநாதனும், மூன்று மாதக் காலம் தங்கி அதன் பின் 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு திரும்பினார். இந்த மூன்று மாதக் கால சுற்றுப்பயணமானது பெரியாரின் சிந்தனையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சாதி,மத வித்தியாசம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு, ஏழை, பணக்காரன் என்ற பிளவு, கடவுள் பயம், மூட நம்பிக்கை ஏதும் இல்லாதது, அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அனைவரும் தோழர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தது போன்றவை அவருக்கு வியப்பாக இருந்தது. தமிழகத்தில் அனைவரும் சுய மரியாதையுடன் இருக்க வேண்டுமென்ற தனது விருப்பம் சோவியத் நாட்டில் அமலாகி வருவது கண்டு அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். கம்யூனிச அமைப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற புரிதலைக் கொண்ட பெரியார் அந்த கம்யூனிசக் கொள்கையை தமிழகத்திலும் பரப்ப வேண்டுமென்று முடிவு செய்தார். அதன் முதல் நடவடிக்கையாக நவம்பர் 13ஆம் தேதிய ‘குடியரசு’ இதழில் பின்வரும் செய்தி வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து ‘குடி அரசு’ ஏட்டில் அனைத்துப் பெயர்களுக்கும் முன்னால் ‘தோழர்’ என்ற பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது. தோழர் காந்தி, தோழர் ராஜகோபாலாச்சாரி, தோழர் ஈ.வெ.ரா என்றே அனைத்து பெயர்களும் எழுதப்பட்டன.
முக்கிய குறிப்பு
இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக தோழர் என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டுமென்றும், மகா-ள ஸ்ரீ, திருவாளர், திரு., தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜித் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். ‘குடிஅரசிலும்’, அடுத்த வாரம் முதல் அந்தப் படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
-ஈ.வெ.ராமசாமி