tamilnadu

எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களை படிப்படியாக மூடுவதற்கு முடிவு கட்டுக!

 புதுதில்லி, ஜூன் 24- பொதுத்துறை நிறுவனங்களான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல்.நிறுவனங்களை மத்திய அரசு படிப்படியாக மூடுவதைக் கைவிட்டு, அவற்றை புனர்நிர்மாணம் செய்திட முன்வர வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரிபுன் போரா (அஸ்ஸாம்) வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் ரிபுன் போரா பேசியதாவது: மத்திய அரசின் தவறான கொள்கைகளின் விளைவாக மாபெரும் பொதுத்துறை நிறுவனங்களான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். படிப்படியாக மூடப்பட்டுக் கொண்டிருக்கும் அதிர்ச்சிதரத்தக்க நிலை உருவாகி இருக்கிறது. இன்றைய நிலையில் எம்.டி.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் 45 ஆயிரம் ஊழியர்களுக்கும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் 1,74,312 ஊழியர்களுக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை, அல்லது முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏன் இந்த நிலை? ஏனெனில், 4ஜி, 5ஜி அலைக்கற்றை வரிசைகள் தனியார் நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கிற அதே சமயத்தில் இப்பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு வேண்டுமென்றே முடமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நிறுவனங்களைக் காப்பாற்ற இந்த அரசு முன்வர வேண்டும். எல்ஐசி-யில் கடன்பெற்று ஐஎல்எப்எஸ் நிறுவனத்தை, ஜிஎஸ்பிசி நிறுவனத்தை, ஐடிபிஐ வங்கியைப் பாதுகாத்ததுபோல் இந்நிறுவனங்களையும் பாதுகாத்திட இந்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ரிபுன் போரா கூறினார்.