கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 15
31.7.1880 - 8.10.1936
புகழ்மிக்க இந்தி - உருது எழுத்தாளரான முன்ஷி பிரேம்சந்த்தின் இயற்பெயர் தன்பத்ராய் ஸ்ரீவத்சவா. தனது பெயரை எழுத்துலகில் முன்ஷி பிரேம் சந்த் என்று மாற்றிக் கொண்டார். இவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்திய எழுத்தாளர் என்று போற்றப்பட்டார். இவர் நாவல், சிறுகதை நாடகங்களை எழுதிக் குவித்தார். (உபன்யாஸ் சாம்ராட்) நாவல்களின் பேரரசர் என்று எழுத்தாளர்களால் புகழப்பட்டார். 14 நாவல்கள், 300 சிறுகதைகள், பலகட்டுரைகள், மேலை நாட்டு இலக்கியங்களை இந்தியில் மொழியாக்கம் என எழுதியவர். இவர் காசி அருகே லமிகி என்ற கிராமத்தில் பிறந்தார். எழுவதையே தொழிலாய் கொண்டார். இவரது மனைவி சிவராணி தேவி, மகன் அம்ரித்ராய். இவரது புகழ்பெற்ற படைப்புகள் கோதான், பஜார் இகுஸின், கர்மபூமி, சத்ரஞ்ச் சிகில்வாடி, காபான், மாஸை ரோவர், இட்கா ஆகியவை.
ஏழு வயதில் மதரசா பள்ளியில் சேர்ந்து உருது, பாரசீக மொழிகள் கற்றார். எட்டுவயதில் தாயார் இறந்தபின் தந்தை மறுமணம் செய்தார். அக்காவும் திருமணம் செய்து போனதால் அனாதையாகி பாட்டியிடம் வளர்ந்தார். ஓய்வு நேரத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தபோது ஏராளமாக பாரசீக இலக்கியங்களைப் படித்தார். உயர்நிலைக் கல்வி இங்கிலீஷ் மிஷனரி பள்ளியில் படித்தார். அவர் படித்த முதல் ஆங்கில நூல் எட்டு வால்யூம் கொண்ட “லண்டன் நீதிமன்ற ரகசியங்கள்” என்ற நூலாகும். அவர் முதலில் சிறுகதை எழுதினார். ஒரு மேல்சாதி இளைஞன் கீழ்சாதிப் பெண்ணை காதலிக்கும் கதை. ஆனால் அது பிரசுரமாகவில்லை. ஒன்பது படிக்கும் போதே அவரது தாய்வழிப்பாட்டனார். 15 வயதிலேயே வயதில் மூத்த வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார். பிரேம் சந்த் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு மத்திய இந்துக் கல்லூரியில் படித்தார். கணக்கு பாடத்தில் பெயிலானதால் ஒரு வக்கீல் குமாஸ்தாவாக மாதம் ஐந்து ரூபாய் ஊதியத்தில் வேலை செய்தார். பின்பு மாதம் 18 ரூபாய் ஊதியத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். அப்போது கடவுளின் ரகசியங்கள் என்ற குறுநாவலை எழுதினார். அது ஒரு வாரப்பத்திரிகையில் தொடராக வந்தது. பின்பு கான்பூரில் ஜமானா என்ற உருதுப் பத்திரிகையின் ஆசிரியரானார். தேச பக்தியூட்டும் பல சிறுகதைக ள் எழுதினார். தேசவிடுதலைக்காக கடைசிச் சொட்டு ரத்தத்தையும் சிந்தத் தயாராக வேண்டும் என்பதே அவரது அறைகூவலாக இருந்தது.
ஆசிரியப் பணியிலிருந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரியாக 1909 -ல் பதவி உயர்வு பெற்றார். அவரது நூல்களில் பிரிட்டிஷ் எதிர்ப்பு இருப்பதாய் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றது. எனவே பிரிட்டிஷ் கலெக்டர், பிரேம்சந்த் வீட்டை சோதனை போட உத்தரவிட்டார். போலீஸ் சோதனையிட்டு அவரது நூல்களின் 500 பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியது. இதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. உருது மொழியில் எழுதப்பட்ட தனது நான்கு நாவல்களை இந்தியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அவரது மனைவி சிவராணி ஒரு விதவை. விதவையை திருமணம் செய்ததற்காகவே அவரது உற்றமும் சுற்றமும் அவரை ஒதுக்கியதால் தனது கிராமத்தை விட்டே வெளியேறினார். பின்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு காசியில் 1921-ல் குடியேறி எழுத்தை நம்பியே வாழ்ந்தார். இதனால் வறுமை, நோய்மையால் தாக்குண்டார். 1923-ல் சரஸ்வதி பிரஸ் என்ற அச்சகத்தை நிறுவினார். 1924ல் ரங்கபூமி என்ற நாவலை வெளியிட்டார். அது சுர்தாஸ் என்ற கண்தெரியாத பிச்சைக்காரனின் அவல வாழ்வு பற்றியது. அது பெரும் பாராட்டைப் பெற்றது. அடுத்து அவரது நிர்மலா நாவல் வரதட்சணைக் கொடுமைபற்றியது. பெரும் புகழ் பெற்றது. விதவைத் திருமணத்தை வலியுறுத்தும் பிரதிக்யா நாவலும் பாராட்டப்பட்டது.
1931-ல் கான்பூரில் ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அது மார்வாரிகளால் நடத்தப்பட்ட கல்லூரி. அவர்களோடு கருத்து வேறுபாட்டால் அதை ராஜினாமா செய்துவிட்டு காசிக்கே திரும்பிவந்து “கர்மபூமி” நாவலை வெளியிட்டார். கொஞ்சகாலம் காசி வித்யாபீட பள்ளித் தலைமையாசிரியரானார். அப்பள்ளி மூடப்படவே லக்னோ சென்று மாதுரி என்ற பத்திரிகையின் ஆசிரியராய் பணியாற்றினார். 1934-ல் மும்பையில் சினிமா கதாசிரியராக சேர்ந்தார். அஜந்தா சினிமாஸ் நிறுவனம் ரூ. 8000 ஆண்டு ஊதியம் தர ஏற்றது. மஸ்தூர் (தொழிலாளி) என்ற படம் வெளியானது. சில நாட்களிலேயே படம் தடைசெய்யப்பட்டு நிறுவனம் நட்டமடைந்தது. அவர் மும்பையை விட்டு அலகாபாத் சென்றார். அங்கு பயிலும் தனது மகன்களைப் பார்த்து விட்டு காசி திரும்பினார். அவர் மிகவும் உடல் நலிவுற்றிருந்தார். லக்னோவில் நடந்த மாநாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார். அடுத்த சில மாதங்களிலேயே 8.10.1936-ல் தனது 56வது வயதில் காலமானார்.
பிரேம்சந்தின் கோதான் உபன்யாஸ் (ஒரு பசுவின் பரிசு) உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. அவர் கடைசியாக எழுதிய கதை “கிரிக்கெட் மேட்சிங்” ஆகும். அவரது படைப்புகள் ஏழை, நடுத்தர மக்கள் பற்றியதாகவே இருந்தது. மக்களிடம் விழிப்புணர்வையும், எழுச்சியும் ஏற்படுத்தவே எழுதினார். ஊழல்கள், குழந்தை விதவைகள்,விபச்சாரம், நிலப்பிரபுத்துவ அக்ரமங்கள், வறுமை, அந்நிய ஆட்சிக்கெதிரான விடுதலை வேள்வி பற்றியே அதிகம் எழுதினார். அரசியலில் அவர் முதலில் கோகலேயையும், பின்பு திலகரையும், அதன்பின் காந்தியையும் ஆதரித்தார். ஜாமீன் எதிர்ப்பு, அரசியல் ஒடுக்குமுறை,விவசாயி, தொழிலாளிகளின் அவல வாழ்வுக்கெதிராக எழுதிக்குவித்தார். அவரது அனைத்து நூல்களும் ஆங்கிலத்திலும், ரஷ்யனிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சர்கதி, சதுரங்க கில்லாடி திரைப்படங்களாய் வந்து வெற்றிபெற்றன. சேவாஸ்தானம் (சேவை இல்லம்) எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்து படம் வெற்றியடைந்தது. அவரது ஒரு கிராமத்தின் கதை நாவலை மிருணாள் சென் தெலுங்கில் ஒக ஊரி கதா என்று இயக்கி பரிசு பெற்றது. காபான் திரைப்படமாக சுனில்தத் - சாதனா நடித்து நன்கு ஓடியது. சமூகத்தில் நிலவும் யதார்த்த வாழ்வையே யதார்த்தமாக சித்தரிக்க வேண்டும் என்பதில் கடைசிவரை உறுதியோடு நின்றார். மற்ற படைப்பாளிகளுக்கும் இதையே வழிகாட்டினார்.