tamilnadu

img

கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இடஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்

1862 - ‘அதிசய உலகத்தில் ஆலிஸ்’ கதையை, ஒரு படகுப் பயணத்தின்போது ஆலிசுக்கு(ஆம்! ஆலிசுக்குத்தான்!) சார்லஸ் லுத்விக் டாட்ஜ்சன் கூறினார். இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரியின் தலைவரான ஹென்றி லிட்டெல்-இன் பத்துக் குழந்தைகளில் நான்காம் குழந்தை ஆலிஸ் லிட்டெல். கவிதைகள், சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்த டாட்ஜ்சன், லிட்டெலுக்கு அறிமுகமாகி, குடும்ப நண்பரானார். லிட்டெலின் குழந்தைகளை, துடுப்புப் படகில் சிறு பயணங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த டாட்ஜ்சன், அப்படியான ஒரு பயணத்தில் கூறிய கதையே ‘அதிசய உலகத்தில் ஆலிஸ்’. அந்தக் கதையை எழுதித் தருமாறு ஆலிஸ் லிட்டெல் கேட்டதால், ‘நிலத்திற்கடியில் ஆலிசின் சாகசங்கள்’ என்ற பெயரில் 1864இல் கையெழுத்துப் பிரதியாக எழுதித் தந்தார் டாட்ஜ்சன். 1863இல் பாதி எழுதப்பட்டிருந்த நிலையில் அதைப்படித்த, லிட்டெல் குடும்பத்தின் ஆலோசகர் ஜார்ஜ் மெக்டொனால்ட், நூலாக வெளியிடுமாறு டாட்ஜ்சனை ஊக்குவிக்க, வெளியிடுவதற்கு மேக்மில்லன் பதிப்பகம் ஒப்புக்கொண்டது. ‘அதிசய உலகத்தில் ஆலிசின் சாகசங்கள்’ என்ற தலைப்புடனும், டாட்ஜ்சன் ஒன்பது ஆண்டுகளுக்குமுன் பயன்படுத்திய புனைப்பெயரான லீவிஸ் கரோல் என்பதுடனும் 1865இல் வெளியாகி, மாபெரும் வெற்றிபெற்றது. ஆலிஸ் பெயருடன், மற்ற சகோதரிகளின் பெயர்களும் கதையில் குறிப்பிடப்பட்டிருப்பதால், ஆலிஸ் லிட்டெல்தான் கதையில்வரும் ஆலிஸ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், அதை கரோல் மறுத்துவிட்டார். முயல் வளை வழியே தரைக்கடியில் சென்று, விந்தைகளைக் காண்பதான இந்த நூல் செவ்விலக்கியங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது. பொருட்களை, உண்மையான அளவைவிடப் பெரியதாகவோ, சிறியதாகவோ, உண்மையில் இருப்பதைவிட அருகிலோ, தொலைவிலோ உணரும் நோய், ‘அதிசய உலகத்தில் ஆலிஸ் நோய்க்குறியீடு’ என்றே அழைக்கப்படுகிறது. மூளைக்கட்டி, ஒற்றைத்தலைவலி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களால் இவ்வாறான குழப்பமான தோற்றங்கள் உணரப்படுகின்றன. கணிதவியலாளர், புகைப்படக்கலைஞர், தேவாலய துணைக்குரு என வேறு பரிமாணங்களையும்கொண்ட கரோலுக்கு ஒற்றைத்தலைவலி இருந்தது. எனவே, ஒற்றைத்தலைவலியால் அவர் காணநேர்ந்த உருவங்களைக்கொண்டே அவர், இக்கதையை உருவாக்கியிருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.