tamilnadu

img

 திருத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கை வரைவு வெளியீடு - இந்தி கட்டாயம் இல்லை 

 தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மும்மொழி கொள்கை பிரச்சினையில் மத்திய அரசு பணிந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மும்மொழி கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று அதில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

புதிய தேசிய கல்வி கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் கடந்த 31-ந் தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்விக் கொள்கை  வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் ஜூன் 30-ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து #stophindiImposition, #TNAgainstHindiImposition போன்ற ஹேஷ்டேக்குகள் தேசியஅளவிலும் உலக அளவிலும் டிரண்ட் ஆனது. 

 தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக சிபிஎம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.இதைத்தொடர்ந்து தற்போது திருத்தப்பட்ட வரைவு கல்விக்கொள்கை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;