tamilnadu

img

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டு நடவடிக்கைகளிலிருந்து சென்சஸ் நடவடிக்கைகளைத் துண்டித்திடுக!

சிபிஎம் வலியுறுத்தல்

புதுதில்லி, மார்ச் 4- தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டு நடவடிக்கைகளிலிருந்து, சென்சஸ் என்னும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைத் துண்டித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்காக கணக்கெடுக்கும் நடைமுறை குறித்து பல மாநில முதலமைச்சர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ள நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்காகக் கணக்கெடுக்கும் பணியிலிருந்து, சென்சஸ் தரவுகளைத் தொகுக்கும் பணிகளைத் தனியே மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். சென்சஸ் நடைமுறைகள் அரசமைப்புச்சட்டத்தின் கட்டளையின்படி ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். ஆனால், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது 2003இன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் வனையப்பட்ட விதிகளின் கீழ் வருகிறது. எனவே, சட்டப்பூர்வமாகவே இதை இரண்டையும் ஒன்றாக இணைத்திடக் கூடாது.

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்காக சேகரிக்கப்படும் தரவுகள் தானாகவே தேசியக் குடிமக்கள் பதிவேட்டுத் தயாரிப்புக்காக பயன்படுத்திக்கொள்ளப்படும் என்ற புரிதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாக கோடானுகோடி மக்கள் தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை மெய்ப்பிப்பதற்காக ஆவணங்களைத் தாக்கல் செய்திடுமாறு தேவையில்லாமல் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இது தொடர்பாக இதற்குமுன் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை ஆய்வு (pilot study) நாட்டில் 43 சதவீத இந்தியக் குடிமக்களிடம்தான் ஏதேனுமொரு ஆவணச் சான்று இருந்ததாகக் காட்டுகிறது. இந்த எதார்த்த நிலையினைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் எதிர்ப்பினை மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)