tamilnadu

img

ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு

புதுதில்லி, மே 1- உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளியன்று அறிவித்தது.மே 3 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும் சமீபநாட்களாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீக்கினால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் என்றும் ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்தினால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பினர் அறிவுறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கை மே 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இருவாரத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளி,கல்லூரிகளை திறக்க அனுமதியில்லை. சில காரணங்களுக்காக மட்டுமே பேருந்து, விமானம்,ரயில் போன்றவை அனுமதியுடன் இயக்கப்படும். கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளும் ஆட்டோ,டாக்சி இயக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை எதற்காகவும் யாரும் வெளியில் நடமாடக்கூடாது.10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெளியில் வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்தத்தகவலை தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,065 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1152- ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று சங்கிலியை உடைக்க சிவப்பு. ஆரஞ்சு மண்டலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டப் பகுதிகளை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

சென்னையில் தீயாய் பரவுகிறது

தமிழகத்திலும் கொரோனா வீரியமாகவே உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளியன்று தொற்றால் பாதிக்கப்பட்டோர் 203. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் தீயாய் பரவி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. வெள்ளியன்று மட்டும் சென்னையில் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று 9,615 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. மொத்த சாம்பிள்கள் சோதனை 1,29,363. நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில்  1,20,083, பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 45 இடங்களில் தொற்று ஆய்வகங்கள் உள்ளன. வீட்டுக் கண்காணிப்பில் 33,184 பேர் உள்ளனர். கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2,013 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 40 பேர் உள்ளனர். புதனன்று 54 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,312 பேர் குணமடைந்துள்ளனர். வீடு திரும்பியவர்கள் தவிர 1,183 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. 

வெள்ளிக்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக சென்னையில் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 1,082 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் எட்டுப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர், காஞ்சிபுரத்தில் தலா இருவர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய ஊர்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்கள் 150 பேர். இதில் பெண்கள் 78 பேர். ஆண்கள் 72 பேர். 13 வயது முதல் 60 வரையில் பாதிக்கப்பட்டவர்கள் 2,110 பேர். பெண்கள் 1,410 பேர். ஆண்கள் 700 பேர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 266 பேர். பெண்கள் 182 பேர். ஆண்கள் 84 பேர். வெள்ளியன்று 11 மாவட்டங்களில் தொற்று பரவியுள்ளதாக செய்தியாளர்களிடம் விவரித்ததோடு அறிக்கையையும் கையில் கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களுக்கும், செய்தியார்களுக்கும் சமாதானம் கூறினார். அதாவது “தமிழகம் சேப் ஜோனில்” உள்ளது. டெஸ்ட்கள் அதிகம் எடுக்கப்படுகிறது. கர்ப்பிணிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். டெஸ்ட்கள் எடுப்பதில் தமிழகம் தான் முன்னோடி. ஒரு லட்சம் பேரில் 165 பேருக்கு டெஸ்ட்கள் எடுக்கப்படுகிறது என்றார்.

தேனியில் கெரோனாவில் 43 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்ற 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக எனது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.