புதுதில்லி
சீனாவுடனான 8-வது கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று இந்தியா தெரிவித்துள்ளது. எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. படைகளை திரும்பப் பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்வது என இருதரப்பும் முடிவு செய்துள்ளன.இந்நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 8-வது சுற்று பேச்சுவார்த்தை நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே உள்ள இந்திய பகுதியான சுசுல் என்ற இடத்தில் நடந்தது.இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்குவது குறித்தும், இதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா - சீனா இடையேயான 8-வது கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. எனினும், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆகவே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.