லடாக் பகுதியில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழஞ்சலி செலுத்துகிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்து உள்ளார்கள் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் பழனி என்பவரும் இந்த மோதலில் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எல்லை காக்கும் போராட்டத்தில் வீரமரணமடைந்த பழனி அவர்களது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது புகழஞ்சலியை செலுத்துகிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், இந்திய சீன எல்லையில் பதற்றத்தை தவிர்த்து அமைதியான சூழலை உருவாக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இரண்டு அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.