புதுதில்லி:
நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவி, பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் (பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ்) ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 33 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளோரை பாதுகாக்க, பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின்கீழ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மார்ச் 26-ஆம் தேதி நிவாரண உதவிகளை அறிவித்தார். இதனொரு பகுதியாக பெண்கள், ஏழை மூத்த குடிமக்கள், விவசாயிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்றும், பணத்தை வங்கியில் செலுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 20.05 கோடி ஜன் தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டதாம். சுமார் 2.82 கோடி முதியவர்கள், விதவைகள், ஊனமுற்றோருக்கு மொத்தம் 1,405 கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டதாம். பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 16,146 கோடி ரூபாய் எட்டு கோடி விவசாயிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதாம்.
சுமார் 162 கோடி ரூபாய் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பாக மாற்றப்பட்டுள்ளதாம். இதனால் 10.6 லட்சம் ஊழியர்கள் பயனடைந்துள்ளார்களாம். 2.17 கோடி கட்டடம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3,497 கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்துள்ளதாம்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ், 39.27 கோடி பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் இலவச ரேஷன் விநியோகிக்கப்பட்டுவிட்டது. மொத்தத்தில், 2.66 கோடி இலவச உஜ்வாலா சிலிண்டர்கள் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாம். மத்திய அரசு கணக்கில் என்றைக்காவது தவறிருக்குமா? நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இந்தச் செய்தியை நம்பித்தான் ஆக வேண்டும்.