இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை நெருங்கி உள்ளது. இது மருத்துவ வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் உகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 14,83,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 654 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9,52,744 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 35175 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,96,988 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.