புதுதில்லி:
கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் 49 பேர், கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினர். வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா,நாட்டின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் சியாம் பெனகல், அபர்ணா சென், மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தனர்.
இவர்களில் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பும் ஒருவர் ஆவார். இதற்காக, அவரை கடந்த ஒரு மாதமாக ட்விட்டரில் டேக் செய்து, சங்-பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அவரது குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல்களும் விடுத்தனர். காஷ்யப் இதுதொடர்பாக போலீசிலும் புகார் செய்தார்.இந்நிலையில், தனது ட்விட்டர் கணக்கை, ரத்து செய்துவிட்டு, அதிலிருந்துவெளியேறுவதாக தற்போது அறிவித்துள்ளார். கடைசியாக தன்னைத் திட்டியவர் களுக்கு ‘வாழ்க வசவாளர்கள்’ என்ற பாணியில் ஒரு பதிவு ஒன்றை ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். “உங்கள் பெற்றோர்களுக்கும் போன்கால்கள் மூலம் கொலைமிரட்டல் வரும்போது, உங்கள் மகள் ஆன்லைன் வசைபாடல்களுக்கு இலக்காகும்போது, நீங்களும் பேச நினைக்க மாட்டார்கள். குண்டர்களே நம்மை ஆளப் போகிறார்கள்.இந்த ‘புதிய இந்தியா’வில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்” என்று காஷ்யப் குறிப்பிட்டுள்ளார்.