புதுதில்லி, ஜூன் 25- இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியுள்ள பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இயங்கும் அனைத்து இளம் பட்டதாரி வகுப்புகளிலும், இந்தியை ஒரு கட்டாயப் பாடப்பிரிவாக உந்தித்தள்ளி பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. புதிய கல்விக் கொள்கையின் வரைவில் இந்தியைத் திணித்திட மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு அதனை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்ற பின்னணியில் இதுபோன்று ஒரு சுற்றறிக்கையை பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஏற்பட்டிருந்த சர்ச்சையைச் சரிசெய்திட மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டிருந்தது. எனவே, பல்கலைக் கழக மானியக் குழு இந்தியைத் திணித்து சுதந்திரமான முறையில் சுற்றறிக்கை வெளியிட முடியாது. இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களுடன் உள்ள மாபெரும் நாடாகும். இந்த நிலையில் யுஜிசி போன்ற ஓர் அமைப்பு, முறையான நடைமுறைக் கலந்தாலோசனைகள் எதுவுமின்றி, ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் நாடு முழுவதும் திணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருப்பது, இதர மொழிகளைப் பேசும் மக்களிடையே தேவையற்ற முறையில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். இத்தகைய இழிமுயற்சிகள், காரணமாக பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட மக்களிடையே ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கே இது இட்டுச் செல்லும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரும், கல்வித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்புகளும், பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை அது திரும்பப்பெறுவதை உத்தரவாதப்படுத்திட அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திடும் விதத்தில், பல்வேறு மொழிகள் பேசும் மக்களின் கருத்தை, இதற்கெதிராக ஒருங்கிணைத்திட முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்
இந்நிலையில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தேசிய வரைவு கல்விக் கொள்கையில் இந்தியை கட்டாயமாக்க முயற்சித்து கடுமையான எதிர்வினைகளுக்கு பின்பு அந்த ஆலோசனையை திரும்பப்பெற்றுள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் நிர்ப்பந்தித்து வருகிறது. 28.06.2019 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது. இதே போன்ற ஆணையை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு தனது துறைகள், நிறுவனங்கள், கல்வி அமைப்புக்கள் மூலம் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் தென்னக ரயில்வேயில் இத்தகைய முயற்சியை செய்து உடனடியாக பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செய்யப்படும் இந்த முயற்சி கடும் கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழுவின், பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், அனைத்து ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த எதேச்சதிகார முயற்சிக்கு எதிராக குரலெழுப்பிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.